தழுவக் குழைந்த படலம் 599


     முப்பத்திரண்டறங்கள் வாழவும், எவ்வுலகத்தும் தங்கிய ஒளி யெல்லாம்
எமது பெருமானார் தம் வழுவா விழிகளின் ஒளி நிறைவே என யாவரும்
உணரவும், கங்கைச் சடையவர் அடியவர் உள்ளம் களிதூங்கவும்.

இறைவன் திருக்கண்களை இறைவி புதைத்தல்

கைம்மிக்கெழு காதல் விருப்புமீ தூர்கு றிப்பின்
விம்மிப்பணைத் துப்புடை வீங்கி எழுந்த கொங்கைப்
பொம்மற்பெரு மாட்டி வெரிந்புறத் தெய்தி வல்லே
செம்மற்பிறை வேணிய னார்திருக் கண்பு தைத்தாள்.    26

     கை கடந்து எழுகின்ற காதலாகிய விருப்பம் அவ்வளவின் நில்லாது
வெளிப்படும் கருத்தினால் பொருமிப் பருத்துப் புடை திரண்டு நிமிர்ந்த
தனங்களையுடைய பொலிவுடைய உமாதேவியார் பின்னாகிய முதுகின்
பக்கத்திற் போய்ப் பிறையை அணிந்த பெருமானார் தம் திருக்கண்களை
விரைய மூடினர்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

இருண்டபூங் குழலாள் செங்கை இறுகுறப் புதைத்த லோடும்
இருண்டகந் தரத்தார் நோக்கின் இருசுடர் மறைந்த வாற்றால்
இருண்டது புவனம் முற்றும் இருண்டஎண் டிசையும் என்றும்
இருண்டறி யாத விண்ணோர் இருக்கையும் இருண்ட தந்நாள்.  27

     இருண்ட கூந்தலையுடைய அம்மையார் தம் செவ்விய கைகளால்
கண்களை இறுகப் பொத்திய அளவிலே இருண்ட கண்டத்தர் தம்
திருக்கண்களின் இரண்டு சுடரும் மறைந்தமையால் எல்லா வுலகங்களும்
இருண்டன. எண் திசைகளும் இருளுற்றன. இருள் படர்ந் தறியாத
தேவருலகும் அந் நாளில் இருள் சூழ்ந்தது,

அழுங்கவே தன்னை நாளும் காய்ந்துலாம் அருக்கர் தம்மோ
டொழுங்குறத் திரட்டி நீ்ட்டிச் செருகிவைத் திட்டா லொக்குஞ்
செழுங்கதிர் மதியஞ் செந்தீ உடுமணித் திரளை யெல்லாம்
விழுங்கித்தன் வீறு காட்டிப் படர்ந்தது திமிர வீக்கம்.      28

     வருந்தும்படி எந்நாளும் வெகுண்டுலாவும் சூரியரையும், அவர் தம் கதிர்களையும், சந்திரரையும், செந்தீக் குழாத்தையும், விண்மீன்களையும் உள்ளடக்கித் தன் மிகு வலியைப் புலப்படுத்தி இருட் பெருக்கம் பரவியது.

சிறைபடு கூகை யாதி கருங்கொடித் திரள்க ளொத்த
மறமலி புலிக ளாதி வானரக் குலங்க ளொத்த
நறைகமழ் குமுதப் போதும் நளினமுந் தம்மு ளொத்த
உறுதுயர் நேமிப் புள்ளுஞ் சகோரமும் ஒருங்கே யொத்த.   29