தழுவக் குழைந்த படலம் 603


அன்றிய நெஞ்சுரை செல்லரு நீஅவ ரவர்தத்தம்
பொன்றும் உணர்ச்சியின் அர்ச்சனை பூணவும் எளிவந்தாய்.  42

     அவ்வளவில் ஆளுடைய நாயகியார் இறைவரை வணங்கி ஒருப்பட்ட
சிந்தையொடும் உரைப்பர், மாறுபட்ட மனம் வாக்குக்களைக் கடந்த நீர்
அவரவர் சிற்றுணர்ச்சியொடும் புரியும் பூசனையை ஏன்று கொள்ள எளியரும்
ஆயினீர்.

நானும் மகிழ்ந்துனை அர்ச்சனை செய்யும் நலம்பெற்றேன்
தேனமர் கொன்றை மிலைச்சிய செஞ்சடை வள்ளால்நின்
ஊனமில் பூசனை செய்திறம் எத்திறம் உரைஎன்ன
ஆனுடை ஊர்தி அருட்கட லன்னவர் புகல்கிற்பார்.      43

     ‘அடியேனும் பூசனையை மகிழ்ந்து செய்யும் பேறு பெற்றேன்’
வள்ளலே! குற்றமற்ற பூசனையைச் செய்யும் முறையை உரைமின். என்று
வேண்ட, விடையேறுகைக்கும் விமலர் அருள்வார்.

கரிசறு நித்தநை மித்திக காமிய மெனமூன்றாம்
உரிமையின் எம்அடி அர்ச்சனை ஏனைய உலகத்துப்
புரிதரு பூசனை நித்திய பூசனை யாம்அன்றித்
தெரிதரில் இன்னவை காமியம் நைமித் திகம்ஆகா.    44

     உரிமையொடும் எம்மைப் பூசனை செய்தல் நித்தம், நைமித்திகம்,
காமியம் என மூவகையாகும். மண்ணுல கொழித்த உலகங்களில் நித்திய
பூசனை ஒன்றே செய்தல் அமையும். பிற இரண்டும் அவ்வுலகங்களில்
செய்தல் கூடா.

பொருவறு மூன்று முறும்கரு மம்புரி நிலமீதே
கரும நிலந்திகழ் பாரத மாம்வரு டங்கண்டாய்
திரைகெழு கீழ்க்கடல் மேற்கடல் சேதுவொ டிமயத்துள்
மருவிய மேதினி பாரத மால்வரு டம்மாமால்.      45

     ஒப் பிகந்த முத்திறப் பூசனையும் புரிதற்குரிய கரும பூமி இந்நிலேமே.
கரும பூமியே பாரத பூமி எனப்படும், அது கிழக்கிலும் மேற்கிலும் கடலை
எல்லை யாகவும் வடக்கிலும் தெற்கிலும் முறையே இமயமலையையும்
சேதுவையும் எல்லையாகவும் உடையது.

இத்தகு பாரத மாம்வரு டத்தின் எமக்கான
உத்தம வைப்பின் விதிப்படி எம்மை இலிங்கத்தின்
முத்துறழ் வெண்ணகை முற்றிழை மூதுல கெல்லாம்மெய்ச்
சித்தி பெறும்படி வல்லை அருச்சனை செய்கிற்பாய்.   46

     இந்நிலையுடைய பாரத பூமியில் எமக்குரிய உத்தமத் தலத்திடை
விதிப்படி சிவலிங்கத்தில் முற்றுப் பெற்ற அணியினளே! ஆன்மாக்கள்
நலம் பெற விரைந்து எம்மைப் பூசனை செய்வாயாக.