எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல் பற்றியவை தாமாய் என்றும், உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர்சத் தாய்இருளும் ஒளியும் அல்லாக், கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாய்எம் அருளாற்கட் டறுத்து வீடு, நண்ணுபவாய் உணர்த்தவுணர் சிற்றறிவிற் பலவாம்நற் பசுக்கள் தம்மை. 60 ‘அளப்பிலவாய், ஒருமலம், இருமலம், மும்மலம் உடைமையின் மூவகையாய், படிகம் போல அடுத்ததன் தன்மையவாய் எக்காலத்தும் உள்பொருளாய் சத்தையும் அசத்தையும் அனுபவிக்கும் சதசத்தாய் இருளிலும் ஒளியிலும் அழுந்தும் கண் போல்வதாய் ஏகதேசியாய் வியாபியாய் (வசித்திட வரும் வியாபியாய்) எம்முடைய அருளினாற் றளை நீங்கி மோட்சத்தைத் தலைப்படுவனவாய் அறிவிக்க அறிகின்ற சிற்றறிவினையுடைய பலவாகும் நல்ல (பசு) ஆன்மாக்களை’ ஒன்றாகி அழிவின்றிப் பலஆற்றல் உடைத்தாய்ச்செம் புறுமா சென்னத், தொன்றாகி அருள்விளைவின் நீங்கும்இருள் மலத்துடன் அத் தொடக்கு நீப்ப, மின்றாவும் உடலாதி நல்கும்இரு மாயைஇரு வினைகட் கேது, என்றோது கருமம்இவை நிகழ்த்துதிரோ தமும்எனும்ஐ வகைப்பா சத்தை. 61 ‘ஒன்றாய், நித்தியமாய், பலவகை ஆற்றல்களை உடையதாய் செம்பிற் களிம்பு போல அநாதியாய், திருவருள் விளைவினால் வலிகெடும் ஆணவ மலத்தோடும் அத் தளை அறும்படி தீபம் போலும் தனுகரண புவன போகங்களை நல்கும் இருவகையாம் சுத்தமாயையும், அசுத்தமாயையும், இருவினைகட்குக் காரணமாம் மூலகன்மமும், இவற்றைத் தொழிற்படுத்தும் திரோதமலமும் ஆகிய பஞ்ச மலங்களை,’ திரிபுணர்வு பொதுமாற்றிச் சிறப்பியல்பான் உணர்ந்தெண்ணித் தெளிந்து தேறும், அரியபெறற் சன்மார்க்க ஞானநிலை இதுகிடைத்த அறிவான் மிக்கோர், பெரியமலப் பிணி யவிழ்த்துச் சிவானந்தப் பெரும்பேறு மருவிப் பாசம், இரிவதூஉம் புகுவதூஉம் இன்றிஒரு நிலையாம்அவ் வியல்பு தன்னில். 62 ‘மாறுபட உணர்தலையும் பொதுவாக உணர்தலையும் கைவிட்டு உண்மை யியல்பைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து உள்ளா றுணரும் பெற லரிய நன்னெறியாகிய ஞான நிலை வாய்க்கப் பெற்ற அறிவான் மேலோர் ஆணவ மலக்கட்டை அறுத்துக்கொண்டு சிவானந்தமாகிய பெரிய பேற்றினைப் பொருந்தி அகல்வதும் புணர்வதும் இல்லாத அந்நிலையில்,’ உணர்பொருளும் உணர்வானும் உணர்வுமெனும் பகுப்பொழியா தொழிந்து பானுப், புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும் புனல்உவரும் பரிதி மீனுந், துணையஇரண் டறுகலப்பின் எம்முடனாய்ப் பேரின்பம் துய்த்து வாழ்வார். இணர்விரைத்த மலர்க்கோதாய் அவர்வடிவே எமக்கினிய கோயி லாமால். 63 |