மந்தரம் யானைக்கும், (வாசுகி) சங்கிலிக்கும், சுரர், அசுரர், யானைப்பாகர்க்கும் உவமம் ஆகும். நவமணி கொழித்துப் பொங்கு நளிதிரை அகழி நாப்பண் கவளமாக் கடத்த யானைக் கணஞ்சுலாய் உழக்குங் காட்சி உவர்படாப் பௌவம் ஈதென் றுவந்துவந் தெழிலி தெண்ணீர் சுவறவாய் மடுப்பக் கொட்குந் தோற்றமே யனைய தம்மா. 32 | ஒன்பதுவகை மணிகளையும் கரையிற் கொழித்துப் பொங்கா நின்ற செறிந்த அலைகளையுடைய அகழியினடுவில், கவளங்கொள்ளும் பெரிய மதத்தையுடைய யானையின் கூட்டங்கள் சுழன்று உழக்கும் தோற்றம், மேகங்கள் உப்பமையாத கடலிது வென்று மகிழ்ந்து வந்து தெள்ளிய நீர் வற்றப் பருகச் சுழலும் தோற்றத்தை ஒத்திருந்தது. இத்தகை அகழி யென்னும் இதுவும்ஓர் கடலே யாக அத்தினா லிரட்டி யென்னா தேழென அறைவர் மேலோர் தத்தலைக் கடைக்கால் வட்டச் சலதியும் இஃதும் மன்றச் சுத்தநீர்க் கடலென் றெண்ணி ஒருமையின் தொகுத்தார் போலும். 33 | அகழி யென்னும் பெயருடைத்தாய் இதுவும் ஒரு கடலாக, அது காரணமாக (நால் இரட்டி) எட்டென்னாது ஏழென்று கூறுவர் அறிவின் மிக்கோர். தத்துகின்ற அலைகளையுடைய, கூறுங்கால் கடையில் வைத்தெண்ணப்படும் சுத்த நீர்க்கடலும் இவ்வகழியும் சுத்த நீர்க்கடலாகலின் சாதியொருமையால் ஒன்றாக்கிக் கடல் ஏழென வகுத்தனர் போலும், அதன்; அன்சாரியைதொக்கது. எழுகடல்; உவர் நீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன், நன்னீர் என்பன. புடைபயில் பொதும்பர்த் தேனும் புனல்மலர்த் தேனும் பாய்ந்து விடையவர்க் குமையாள் ஆட்ட வரும்மது வேலை யொக்கும் குடநிகர் செருத்தல் மேதி கொட்புறச் சொரிந்த பாலால் உடைதிரை அகழி தீம்பால் அளக்கரும் உற்றா லொக்கும். 34 | நிலம், நீர் ஆகிய இருவகை மலர்த்தேனும் பாய்ந்து, உமையம்மை சிவபிரானார்க்குத் திருமுழுக் காட்டத் தொகுத்த மதுக்கடலை யொக்கும் அகழி; புனிற்றெருமை சுழன்று திரிய மடி சுரந்த பாலால் அவ்வகழி பாற்கடலும் அங்குற்ற தொக்கும். நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ ஆகிய மூவகையைப் பொதும்பராற் கொள்க. பழமுதல் பொருள்கள் விற்கும் பாவையர் நாளும் அந்திப் பொழுதின் அக் கலன்க ழீஇய வண்டலால் புனற்கி டங்கு வழிபடும் உமையாள் எந்தைக் காட்டுமா லியங்கள் ஒன்றுங் கழிவுறா சூழத் தேக்கிக் கிடந்ததே கடுக்கும் மன்னோ. 35 | |