‘‘தலைவவோ! உலகங்களைக் காவல் செய்யும் அடிகேளோ! காயாம் பூப்போலும் திருமேனியவோ! அடியேனை ஆட்கொண்ட தூயவோ! சக்கரத்தைத் தாங்கும் திருக்கரத்தவோ! இளைத்த வழி உதவும் நிதியாகும் ஆதரவவோ! அன்பினால் அணுகினோர்க்கு எந்நாளும் மெய்ப்பொருளவோ! பகைவர்க்கு வெய்யவோ! அரசேயோ! விடைஅர சுயிர்ப்பிற் பட்டு மெலிகின்றேன் ஓலம் இந்தத் தடைவிடுத் தடிய னேனைத் தாங்குவாய் ஓலம் அன்றேல் கடையனேன் ஆவி இன்றே கழிந்திடும் ஓலம் என்னை உடையவா ஓலம் என்றென் றோலம்இட் டழைத்த தாலோ. 96 | ‘‘இடப நாயகத்தின் நெட்டுயிர்ப்பில் அகப்பட்டு மெலியா நின்றேன் ஓலம்! இப்பிணிப்பினின்றும் விலக்கி அடியேனைக் காப்பாய் ஓலம்! காவாயேல், கீழ்மையேன் உயிர் இப்பொழுதே நீங்கிவிடும் ஓலம்! என்னை அடிமையாக உடையோனே ஓலம்! என்றென்று பல்காலும் முறையிட் டரற்றி அழைத்தது. இறைவன் பணித்தல் சீறுவெம் பணிவாய்ப் பட்ட தேரையின் மறுகி ஓசை வேறுபா டெய்தி மாலை விளிப்பதெம் செவியில் கேட்டே மாறடு திகிரி யோய்ஈ தென்என வட்கார் தம்மை நூறிய சீற்றத் துப்பின் நோன்றகை நெடியோன் சொல்வான். 97 | சினத்தால் சீறுகின்ற கொடிய பாம்பின்வாய் அகப்பட்ட தேரையைப் போல மனங் கலங்கிக் குரல் ஓசையில் மாறுபாடு தோன்றத் திருமாலைக் கூவி யழைப்பது எம் (சிவபெருமானார்) முடைய திருச்செவியில் கேட்டு, பகைவரை அழிக்கின்ற சக்கரப்படையோனே! இவ்வோலம் என்னை? என்று வினவ, பகைவரை அழித்த சின வலிமையும் அடல் வலிமையும் உடைய திரிவிக்கிரமமூர்த்தி சொல்வார். இன்றுநின் அடிகள் போற்றும் இச்சையின் என்னோ டிங்கு வன்றிறல் கலுழன் போந்தான் வாய்தலில் துயிலும் வெள்ளிக் குன்றுறழ் இமிலேற் றண்ணல் உயிர்ப்பினிற் கோட்பட் டாவி பொன்றுவான் என்ன நொந்து விளிக்கின்றான் புனிதஎன்றான். 98 | ‘‘விமலனே இந்நாள் நின்னுடைய திருவடிகளைப் போற்றும் விருப்பினுடன் போந்த என்னுடன் மிகு வலியுடைய கருடனும் இங்குப் போந்தனன். கடைவாயிலில் தங்கும் வெள்ளி மலையை ஒக்கும் முதுகிற் கொண்டையுடைய விடையரசின் நெட்டுயிர்ப்பினிற் பிணிப்புண்டு உயிர்கெடுவானை ஒத்து வருந்தி அரற்றி அழைக்கின்றனன்” என்றனர். மாதவன் விளம்பக் கேளா மற்றிது நிகழ்தற் கேது ஏதுநீ அறிந்த துண்டேல் இயம்புதி விடுத்தும் என்ன நாதனே கலுழன் சாலத் தருக்கினான் அதனைப் போக்கும் காதலால் ஈங்கு வந்தேன் காரணம் இதுவால் என்றான். 99 | 78 |