அனேகர், நீன்முகிற் கூந்தல் முனிவர்பன் னியரும் நிரந்தரம் மிடைந்தனர் உவகைப், பான்மையின் இறைஞ்சி அவரவர்க் கடுத்த பணிதலை நின்றுடன் போத. 114 தேவ மகளிர், வேறு பல் திறத்து மங்கையர் மிகப் பல்லாயிரவரும் ஊன்தோயும் சூலத்தை ஏந்திய இடாகினி, காளி யோகினி என்னும் இத்திறத்தினர் பலரும், நீல நிறமுடைய மேகம் போலும் கூந்தலை யுடைய முனிவரர் துணைவியரும், எங்கும் செறிந்து மகிழ்ச்சியினால் வணங்கி அவரவர்க் கமைந்த தொண்டில் தலைநின் றுடன் வரவும். உரகர் கந்தருவர் இராக்கதர் இயக்கர் உருத்திரர் மருத்துவர் வசுக்கள், கருடர்கிம் புருடர் சாரணர் சித்தர் கடவுளர் அயன்அரி முனிவர், மருவுபல் சமய தேவர்கள் முதலோர் வந்தனர் அடிதொழு திறைஞ்சிப், பொருவருங் களிப்பால் சயசய போற்றி போற்றிஎன் றேத்திமுன் செல்ல. 115 உரகரும், கந்தருவரும், இராக்கதரும், இயக்கரும், உருத்திரரும், மருத்துவரும், வசுக்களும், கருடரும், கிம்புருடரும், சாரணரும், சித்தரும், தேவரும், அயனும், அரியும், முனிவரும், பலசமயத் தேவர்களும், பிறரும் வந்து திருவடிகளிற் பணிந் தெழுந்து ஒப்பில்லாத களிப்பினால் சய! சய! போற்றி! போற்றி என்று போற்றி செய்து முன் செல்லவும். நால்வகை இசைக் கருவிகளின் பெருமுழக்கும் ஒருங்கு திரண்டு எழுகடலின் முழக்கினை அடக்கவும், தண்ணுமை முருடு குடமுழா மொந்தை தகுணிச்சம் பேரிகை தக்கை, அண்ணலம் பதலை அதிர்குரல் முரச மாதிய எழுப்புவ பிறவும், பண்ணமை சின்னம் காகளம் கோடு பணிலமே தீங்குழல் முதலா, எண்ணருந் திறத்தின் ஊதுவ பலவும் எழுகடல் முழக்கினை அடக்க. 116 தோற்கருவி, துளைக்கருவிகளின் இன்னிசைகள் எழுகடலின் முழக்கத்தை அடக்கி மேலெழவும், தக்கேசப் படலம் 46, 47-ஆம் செய்யுட்களிற் காண்க. பயின்மணிக் கவரி கவிகைசாந் தாற்றி படரொளி ஆலவட்டங்கள், வயின்வயின் வயங்கக் கற்பகத் தாரு மலர்மழை எங்கணும் இறைப்பக், குயின்மொழி மடவார் குழாங்குழா மாகிக் குலவுபல் லாண்டெடுத் திசைப்பக், கயின்மணிக் குழையார் ஆணுடைதாங்கிக் கதிர்த்தவாள் ஏந்தினர் ஏக. 117 மணிகளைப் பதித்த கைப்பிடிகளையுடைய கவரியும், குடையும், விசிறியும், ஒளிவிரிக்கும் ஆலவட்டமும் எவ்விடங்களிலும் விளங்கவும், கற்பக மலர் மழையை எவ்விடத்தும் சொரியவும், குயில்போலும் இனிய |