| 		| அருக்கி யம்முத லாயின கொண்டு வழிபடூஉப் பெருத்த காதலிற் பேணித் தொழுது வணங்கலும்
 கருக்க டிந்துயர் காழறு மாதவன் ஓகையான்
 மருத்த பூஞ்சுனை விந்த வரைக்கிது பேசுவான்.     187
 |       அருக்கிய பாத்திய ஆசமனம் கொண்டு பூசனை புரிந்து    பெருவிருப்பினாற் போற்றி வணங்கியகாலைப் பிறப்பினை நீக்கினமையால்
 உயர்ந்த குற்ற மற்ற பெருந்தவர் மகிழ்ச்சியொடும் மணமுடைய பூக்களைக்
 கொண்ட சுனைகள் அமைந்த விந்த மலை வேந்தனுக்கிதனைக் கூறுவார்.
 		| மன்னும் மெய்த்தவர் பாற்புரி யும்வழி பாட்டினில் நின்னை யொப்பவர் கண்டிலன் இத்தகு நின்னையும்
 பொன்னி னாட்டவர் போத இகழ்ந்தனர் அன்னதை
 உன்னி உன்னி வருந்திடு கின்றதென் உள்ளமே.    188
 |       நிலைபெறும் உண்மைத் தவமுடையார்மாட்டுச் செய்யும் பூசனையில்     நினக்கு நிகராவார் ஒருவரையும் காண்கிலேன். இங்ஙனம் உயர்ந்த
 உன்னையும் தேவர் பெரிதும் பழித்தனர். அதனைப் பல்காலும் எண்ணி
 என்னுள்ளம் வருந்தாநின்றது.
 		| என்ற தாபத வேந்தனை மீள இறைஞ்சிமுன் நின்று தேவருள் யாவர் இகழ்ச்சி நிகழ்த்தினார்
 என்ற னக்கிகழ் யாதுகொல் கூறினை யேல்அது,
 மன்ற மாற்றுவன் யானென விந்தம் வகுத்ததால்.     189
 |       என்றுரைத்த தவராசர் ஆகிய நாரதரை மீண்டும் வணங்கி எதிர்நின்று    ‘தேவருள் வைத்து யாவர் இகழ்ந்தனர்; அத்தகு குற்றம் யாது? விளக்கினால்,
 அக் குற்றத்தை ஒரு தலையாகப் போக்கிக் கொள்வேன் யான்’ என்று
 விந்தம் விரித்தது.
 		| முனிவன் அவ்வுரை கேட்டு மொழிதரு மேன்மையிற் புனித நின்னொடு பொன்வரை நேரெனும் நூலெலாம்
 பனிம திச்சடைப் பண்ணவர் தேவர் குழாத்தொடு
 நனிம கிழ்ந்தவண் வைகுவர் நாள்தொறும் ஆதலால்.   	190
 |       முனிவரர் அவ்வுரையைக் கேட்டுப் பெருமையுடன் விடையளிப்பர்:     தூயோனே! நூல்களியாவும் நின்னொடு மேருமலை ஒப்பாகும் என்று கூறும்.
 சந்திரசேகரர் தேவர் குழாத் தொடும் அம்மேரு மலையில் விரும்பி
 வீற்றிருப்பர் எப்பொழுதும். ஆகலான்,
 		| இயங்கு கோள்கள் உடுக்கள் இராசி எவற்றொடும் வயங்கு சந்திர சூரியர் தாம்வட மேருவை
 நயந்து சுற்றுவர் நாள்தொறும் அத்திறம் நோக்கியே
 உயங்கு கின்றனன் யானெனப் பின்னரும் ஓதுவான்.    191
 |  |