648காஞ்சிப் புராணம்


சிறிய செயல் என்று எண்ணுதல் கூடாது. ஆராய்ந்தால் உன்னை ஒப்பவர்
மற்றொருவர் மூவுலகினும் இல்லை.

வேசற வொழிதி வெள்ளை விடையவர்க் குவகை நல்கிக்
காசியின் மேன்மை சான்ற கடிநகர் அங்கண் உண்டால்
மூசிள ஞிமிறு பாய முகைஉடைந் தொழுகுந் தேறல்
வாசமென் மலர்ப்பூம் பொய்கை வளவயற் காஞ்சி மூதூர்    214

     வருத்தம் தவிர்தி. வெள்ளிய விடைப் பெருமானார்க்கு உவப்புறுத்திக்
காசியினும் மேம்பாடு நிரம்பிய விளக்கம் அமைந்த நகரம் அங்குள்ளது.
மொய்க்கின்ற இளவண்டுகள் பாய அரும்புகள் உடைந்து ஊற்றுந் தேன்
மணம் வீசும் மெல்லிய மலர்களையுடைய பொலிவுள்ள நீர்நிலைகளும்
வளமுடைய வயல்களும் சூழ்ந்த காஞ்சி என்னும் தொன்னகரம் அதுவாகும்.

மதுமலர்ப் பொழில்சூழ் காசி இறந்திடின் வழங்கும் முத்தி
அதுவும்நம் பெருமா னார்தம் அருளுருப் பெறுவ தாகும்
முதுநகர்க் காஞ்சிதன்னை நினைப்பவே முத்தி நல்கும்
கதுவருஞ் சிவபி ரானார் திருவடி கலப்ப தாமால்.        215

     காசியில் இறந்தால் சிவபிரானார் திருவுருப்பெறுதலாகிய சாரூப
முத்திவாய்க்கும். யாண்டிருந்தும் காஞ்சியை நினைத்த அளவே திருவடி
கலத்தலாகிய சாயுச்சிய முத்தி கிட்டும்.

அத்தலப் பெருமை முற்றும் அழலவிர் சடைமேற் கங்கை
வைத்தவர் அறிவ தல்லால் மற்றெவர் அறியற் பாலார்
சித்திகள் அனைத்தும் நல்கும் ஆயிடைச் சென்றா யாகில்
உத்தம குணத்தாய் மற்றும் பெருநலம் உனக்குண் டாமால்.  216

     அக்காஞ்சியின் பெருமை முற்றும் நெருப்புப்போலும் சுடர்விடும்
சடையிற் கங்கையைத் தரித்தவரே அறிவர் அன்றிப் பிறர் எவர் அறிய
வல்லார்; ஒருவருமிலர். உத்தம குணமுடையாய்! சித்திகள் யாவும் வழங்கும்
அங்குச் செல்வையானால் மேலும் பெருநன்மைகள் பல உனக்குள்ளன
ஆகும்.

சிமிழ்விடப் பாம்பு சுற்றித் திரைகடல் கலக்கிப் பெற்ற
அமிழ்தினை இமையோர்க் கூட்டும் அரியெனக் கம்பம் மேய
குமிழ்மறி விழியாள் பாகர் அருளினாற் கொழிக்கும் இன்பத்
தமிழ்மொழிப் பாடை ஒன்று தரைமிசை விளங்கச் செய்வாய்.  217

     பிணிக்கின்ற விடமுடைய வாசுகியைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக்
கடைந்து பெற்ற அமுதத்தைத் தேவர்க்கு நுகர்விக்கும் திருமாலைப் போலத்
திருவேகம்பத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற மூக்காகிய குமிழம் பூவினையைும்,
மான்மறிபோலும் விழியினையும் உடைய