எண்ணமெலாம் எய்தினேன் எண்ணமெலாம் எய்தினேன் எண்ணமெலாம் எய்தினேன் எங்கள் பெருமானே கண்ணனொடு நான்முகனுங் காணாத் துணையடிகள் கண்ணெதிரே இற்றைநாள் யான்காணக் காட்டினையால் 233 | எண்ணமெல்லாம் எய்தினேன் எண்ணமெல்லாம் எய்தினேன் எண்ணமெலாம் எய்தினேன் எங்கள்பெருமானே! திருமாலும் பிரமனும் காணும் அளவைக் கடந்த இணையடிகளை இற்றை நாள் அடியேன் காணுமாறு கண்ணெதிரே காட்டினை. சங்கரா சம்புவே சங்கரா சம்புவே சங்கரா சம்புவே சாம்ப சிவனேஎன் அங்கணா என்றென்றும் ஒலிட் டழைத்தரற்றும் இங்கெனக்கு வாழ்நாள்கள் இவ்வாறே போகியவே 234 | சங்கரா சம்புவே என்றும் உமையோடு கூடிய சிவனே என்றும் என் அங்கணனே (அழகிய கண்ணோட்டம் உடையவனே) என்றும் என்றும் ஓலமிட்டுக் கூவி அரற்றும் எனக்கு இங்கே வாழ்நாள்கள் இம்முறையிலேயே கழிவதாக. குன்றாத அன்புனக்கே குன்றாத அன்புனக்கே குன்றாத அன்புனக்கே மிக்கோங்கு கொள்கையது என்றும்எனக் குண்டாக என்றும்எனக் குண்டாக என்றும்எனக் குண்டாக என்றும்ஓர் பெற்றியனே. 235 | குறைவுபடாத அன்புனக்கே! குன்றாத அன்புனக்கே! குன்றாத அன்புனக்கே மிக்கோங்கு கொள்கை ஆக எந்நாளும் எப்பிறப்பினும் எனக்குண்டாகுக; என்றும் எனக்குண்டாகுக என்றும் எனக்குண்டாகுக என்றும் ஓரியல்பினனே! வையமிசைத் தோற்றம்முதல் சாங்காறும் மன்றஉனைத் தெய்வமெனப் பேணாத் திருவிலிகள் என்குலத்தில் எய்திஒரு ஞான்றும் பிறவற்க எய்துறினும் வெய்தெனமற் றாங்கே விளிந்தொழிக எம்மானே. 236 | உலகில் பிறந்தநாள் முதலாக இறக்கும் அளவும் அறுதியாக உன்னையே தலைவன் என்று ஏற்றுப் போற்றாத மூதேவிகள் என் குடியில் ஒருகாலத்தும் வந்து பிறவா தொழிக! ஒரோவழிப் பிறக்க நேர்ந்தாலும் விரைய அந்நிலையே செத்துத் தொலைக எம்பெருமானே! ஆனே றுயர்த்தருளி அன்றினார் ஊரெரித்த கோனே எனக்குக் குலதெய்வ மாம்பேற்றால் யானே பெருஞ்செல்வன் யானே பெருஞ்செல்வன் யானே பெருஞ்செல்வன் எல்லா உலகிலுமே. 237 | |