தழுவக் குழைந்த படலம் 655


     ‘அடியனேன் வடக்கே உள்ள காசியை விட்டுப் பிரிந்து நினக்கு
இனியதானமாகிய காப்புடைய மதில் சூழ்ந்த கொடிகள் அசையும்
மாடங்களைக் கொண்ட காஞ்சியினைத் தலைக்கூடித், திருநீற்றினைச்
சண்ணித்த திருமேனியையுடைய புண்ணியமே! இமயமலையிற் பிறந்த
பெண்யானையை மணந்த செருக்குடைய களிறொப்போனே! பெரிய
பாக்கியத்தினைப் பெற்றுப் பிழைத்தேன்.

இத்தகுபே றுடையேற்கு மற்றின்னும் ஒருகருத்து
மெய்த்தபெரு வேட்கையினால் ஒழியாது மேன்மேலுஞ்
சித்தமிசை மூண்டெழுமால் அதுநிரம்பச் சிறியேன்பால்
வைத்தபெருங் கருணையினால் வழங்குவாய் எனப்போற்றி.  242

     இத்தகு பெருஞ்செல்வம் பெற்ற அடியேனுக்கு மேன்மேலும் ஓர்
விருப்பம் நிலைத்த பெருவிருப்பினால் அடங்காது மேலும் மேலும்
உள்ளத்தில் பொங்கி எழும் ஆகலின் அக்கருத்து நிறைவு பெறச்
சிறியேனிடத்து வைத்த பேரருளினால் நல்குவாய்’ எனத் துதிசெய்து.

எவ்வினையும் ஒப்புதலால் திராவிடம்என் றியல்பாடை
எவ்வமறப் புதிதாக யான்வகுப்ப நல்கிஅது
எவ்வருணத் துள்ளார்க்கும் எளிதாகப் புத்தேளிர்
எவ்வெவர்க்கும் சுவைஅமிழ்தின் இனிதாகச் செய்தருளாய்.  243

     எத்தகு கொடு வினையையும் ஓட்டுந் திறத்தினால் திராவிடம் என்று
பேசப்பெறும் இயல்பினையுடைய மொழிக்கு இலக்கணம் யான் துன்பமற
எளிதாகப் புதிய முறையின் வகுத்துரைக்க ஆற்றலை வழங்கி அருளாய்
தேவர் யாவர்க்கும் வழங்கிய சுவையுடைய அமிழ்தத்தினும் இனிதாகுமாறு
அருளுக.

மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்கினிதாய்த்
தோன்றிடும் அத் தமிழ்ப்பாடைத் துதிகொண்டு மகிழ்ந்தருளி
ஆன்றவரம் எல்லார்க்கும் இவ்வரைப்பின் அளித்தருளாய்
ஏன்றெடுத்த மொழிகல்வி எவற்றினுக்கும் இறையோனே.    244

     எழுத்துக்களான் முப்பதேயாய் விரிதலான் முழுவதுமாய் உனக்கினிமை
பயப்பதாய் விளங்கிடும் இத் தமிழ் மொழியால் செய்யப்படும் துதியைக்
கொண் டுவந்தருளி நிரம்பிய வரங்களை யாவர்க்கும் இவ்விடத்தே வழங்கி
யருள் வாயாக.

அகத்தியர் தமிழாசிரிய ராதல்

மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகிஇனி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்.   245