656காஞ்சிப் புராணம்


     எமது பெருமானே! சிறந்த இத்தமிழ்ச் சொல்லால் ஆகிய மந்திரங்களை
அடியேன் குறித்தோதிச் செவ்விய நெறியினின்றும் பிறழவிடாத இத்திருக்
காஞ்சி நகர எல்லையில் உனக் கருகிருக்கும் தொண்டனாய் இனிதிருக்கவும்
அருள வேண்டும். இவ் வரங்களை எனக்கு வழங்குவாய்’ என்றிரந்தனர்.

கூம்பியகைத் தலமுடைய குறுமுனிக்குப் பிஞ்ஞகனார்
தாம்பரிந்து தமிழ் விளங்கும் ஆசிரியத் தலைமையொடு
மேம்படுதென் றிசைக்கிறைமை நல்கிவேட் டனபிறவும்
ஆம்பரிசின் அளித்தருளி அவ்விலிங்கத் திடைக்கரந்தார்   246

     குவித்த கரத்தினராய அகத்தியர்க்குப் பெருமானார் அருளுற்றுத்
தமிழ் இலக்கணத்தை விரிக்கும் ஆசிரியத் தன்மையின் முதன்மையையும்,
உயர்ச்சி மிகு தென் திசைக்குத் தலைமையையும் வழங்கி விரும்பிய பிறவும்
பொருந்திய வகையினால் நல்கி அகத்திய லிங்கத்தே மறைந்தருளினர்.

இவ்வண்ணம் அருள்பெற்ற இருந்தவனும் அகலிடத்தின்
மெய்வண்ண ஓத்துமுறைத் தீந்தமிழை விளக்குவித்துச்
செவ்வண்ணத் திருமேனிப் பெருமானார் திருவடிகள்
அவ்வண்ணந் தொழுதேத்தி நெடுங்காலம் அங்கிருந்தான்.   247

     இவ்வாறு பேறு பெற்ற பெருந்தவரும் தமிழ் நாட்டில் இனிய தமிழ்
இலக்கணத்தை எழுத்து வடிவில் இயல் முறையால் தெளிவுறுத்திச் செம்மேனி
எம்மானார் திருவடிகளை முற்கூறிய முறையில் தொழுது பரசி நீண்ட காலம்
அங்கிருந்தனர்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
கடல்வரைப்பின் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்.   248

     வடமொழியைப் பாணினி முனிவர்க்கு வகைப்படுத்தி அருளி அதற்கு
ஒப்பவே செய்யுளுக் கமைந்த தென் மொழியாகிய தமிழை உலகோர் யாவருந்
தொழுது துதிக்கும் அகத்தியர்க்குத் தெளிய வுணர்த்தினர் விடையூரும்
விமல ரென்றால் கடல் சூழ் நிலவுலகில் தமிழினது பெருமையை யாவரே
அளவு படுத்தி அறிய வல்லார்,

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால்இவ்
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ!     249

     வடமொழி தென்மொழி ஆகிய இரு மொழிக்கும் சிவபெருமானாரே
முதல் ஆசிரியரெனின், நல்லியல்பு தோன்ற இருமொழியையும் வழக்கு
வழிப்படுத்தார் முனிவரசரே எனின், புகழை விரிக்கும்