தழுவக் குழைந்த படலம் 663


     ஆத்திமாலையும், பிறையையும் அணிந்த அங்கணனே! மேகம்
போலும் கரிய கூந்தலையுடைய இமயமன்னன் நீரைச்சொரிந்து
உமையம்மையைக் கையிற் கொடுக்கும் நிறைந்த காட்சியைக் காணாமல்
பெருந்துன்பம் எய்த அடியேனை விலக்குதல் விரும்பத் தக்கதோ!

ஒருவர்முன் அணிசாந்தம் ஒருவர்தம் முதுகப்பப்
பருவிலை மணிஆரம் பட்டிடல் வடுவாக
நிரல்பட மிடைகுற்றார் தொழுநிலை காணாமே
பருவர அடியேனைத் தள்ளுதல் பண்பேயோ.     274

     நெருக்கத்தால் ஒருவர் மார்பிலணிந்த சந்தனம் முன்னிற்கும்
ஒருவர் முதுகிலும் பூசப்பெறவும், மிக்க விலையுடைய மணிமாலை
இறுக்கத்தால் இருவர் மேனியிலும் வடுப் படுத்தவும் வரிசையாகச்
செறிவுற்றவர் தொழும் அந்நிலையைக் காணாமல் துன்புற அடியேனைச்
செலுத்துதல் பாங்குடையதோ!

குடையொடு குடைதாக்கக் கொடியொடு கொடிதாக்கப்
படையொடு படை தாக்கப் பண்ணவர் குழுவோடும்
விடைமிசை வருகோலம் விழிஎதிர் காணாமே
கடைபட அடியேனைத் தள்ளுதல் கவினேயோ.    275

     குடையோடு குடையும், கொடியோடு கொடியும் படையொடு படையும்
மோதும்படி கடவுளர் குழாத் தொடும் விடைமேல் எழுந்தருளும் திருவுலாக்
காட்சியைக் கண்ணெதிர் காணாமல்: கடையேனாக அடியேனைக் கழித்தல்
அழகிதேயோ!

வாரண நிரைசூழ வாம்பரி நிரைசூழத்
தேரணி நிரைசூழத் தேவர்கள் புடைசூழ
ஏரணி நகர்சூழும் நினதெழில் காணாமே
ஆரஞர் உறஎன்னைத் தள்ளுதல் அமைவேயோ.   276

     அணிவகுத்து யானைகள் செல்லவும், தாவும் குதிரைகள் வரிசையாகச்
சூழ்ந்துசெல்லவும், தேர்வரிசைகள் சூழவும், தேவர்கள் மருங்கு சூழவும் மிக்க
அழகிய நகரை வலம் வரும் நினதழகைக் காணாமல் பொறுத்தற்கரிய
துன்பப்பட அடியேனைத் தள்ளுதல் பொருந்துவதேயோ!

தொடிபல நிலம்வீழத் துணைமுலை நனிவிம்மக்
கடிபடு குழல்சோரக் கன்னியர் மயல்கூரும்
படிமறு கிடைநண்ணும் புத்தெழில் பாராமே
மிடியுற அடியேனைத் தள்ளுதல் விதியேயோ.     277

     வளைகள் பலவும் நெகிழ்ந்து நிலத்தில் விழவும், ஒத்த
இருகொங்கைகளும் பெரிதும் வீங்கவும், மணம்கமழும் கூந்தல் நெகிழவும்