ஆதியும் அந்தமும் இல்லாத தாகிய சச்சிதானந்தம் நிறைவுறும் சோதியாகிய நம்மை அகத்துத் தம்மனமாகிய குகையினும் கண்டு வணங்கிப் புறத்தில் தொழுபவர்தம் பிறவியாகிய தீங்கினை அழிக்கின்ற காஞ்சியாகும் பரவெளியிடத்தும் காணத்தக்க பேற்றினரே மறைகளை ஓதி முற்றவும் உணர்ந்த முனிவரரும் தேவரும் பெறற்கரிய வீட்டினைத் தலைப்படுவார். வன்னி யிற்படு பொருள்கள்அக் கணந்தனில் வன்னியாம் அதுபோல, என்ன ராயினும் பரவெளிக் காஞ்சியின் எய்திஎம் இயல்பாவார், அன்ன தன்மையான் அத்தலத் திறந்தவர்க் கழற்கடன் கழிப்போரைத், துன்னு சூதகந் தொடக்குறா திழிஞரைத் தீண்டினுந் தொடக்கில்லை. 297 நெருப்பிற் பட்ட பொருள்கள் அப்பொழுதே நெருப்பாம்; அது போல யாவரே யாயினும் பர வெளியாகிய காஞ்சியினை எய்தின் எம் நிலையை அடைவார். ஆகலின் அக்காஞ்சியில் ஈமக்கடன் (தகனக்கிரியை) முடிப்போரைப் பற்றுகின்ற சூதகக் குற்றம் பற்றுறாது; கீழ்மக்களைத் தீண்டினும் அக்குற்றம் இல்லையாகும். பாப்புப் பாயலோய் இத்தகைச் சிறப்புடைப் பதிவயின் எமைப்போற்றின், காப்புத் தாண்டவம் ஆயிடைக் காட்டுவதும் அந்நடந் தனக்கேற்பக், கோப்புச் சீரமை மத்தளம் முழக்குவா யாகெனக் கொடும்பாச, நீப்புச் செய்தெமை ஆளுடை அண்ணலார் நிகழ்த்திய மொழிகேட்டு, 298 ஆதிசேட னாகிய படுக்கையை உடையோய்! இங்ஙனம் சிறந்த நகரில் எம்மை அருச்சித்தால் உலகுயிர்களுக்குப் பாதுகாவலாகும் திருநடத்தை அங்குக் காணச் செய்வோம் அந்நடத்திற்குத் தக்க கட்டுக் கோப்பாகிய சீர் முதலிய தாள அறுதியினை யுடைய மத்தளம் முழக்குவாயாக’ என்று விடலரிய கொடிய தளையை நீக்கி எம்மை ஆளாகக் கொண்ட அண்ணலார் அருளிய மொழியைக் கேட்டு, வண்டி னம்புகுந் துழக்கிய பூந்துழாய் வானவன் பெரிதோகை, கொண்டு வல்விரைந் தணுகினன் காஞ்சியிற் கோழரைத் தனிமாக்கீழ், அண்டர் போற்றவாழ் அங்கணர்க் கணிமையின் ஆகம விதியாற்றால், கண்டு மத்தள மாதவேச் சரன்றனைப் பூசனைக் கடன்பூண்டான். 299 வண்டு மிதித் தலர்த்திய துளவமாலையர் பெரிதும் உவகை கொண்டு மிக விரைந்து காஞ்சியை அணுகிச் செழித்த அடியினையுடைய ஒற்றை மாமரத்தின் கீழே தேவர் துதிக்க வாழும் திருவேகம்பநாதர்க்கு அணித்தாக ஆகம விதி முறையால் மத்தளமாதவேசரைத் தாபித்துப் பூசனையை மேற்கொண்டனர். |