தழுவக் குழைந்த படலம் 673


     எமது பெருமாட்டியார் மத்தள மாதவேசரை வணங்கிப் பரசி
விரும்புகின்ற காதலினால் பாங்கியரொடும் திருவேகம்பர் பெருமையையே
கருத்துட்கொண்டு போய்ப் பொன்னினால் இயன்ற ஒளி விளங்கு மகா
மண்டபத்தைச் சேர்ந்தனர்.

எண்ணில் பன்மணி யாங்கணும் இளவெயில் எறிப்ப
வண்ணம் மாண்டபொன் தூண்பல நிரைநிரை வயங்கக்
கண்ணி றைந்தபே ரழகினுக் கணியெனக் கவின்று
விண்ண ளாங்கொடி மிடையும் அம் மண்டப வரைப்பின்.  314

     அளவில்லாத பல மணிகளும் இளவெயில் காயவும், நிறத்தினால்
மாட்சிமைப்பட்ட பொற்றூண்கள் பலவும் அணி அணியாகத் திகழவும்,
கண்ணிரம்பிய பேரழகுக்கு அழகென்னும்படி அழகுடைத்தாய் விண்ணில்
தவழும் கொடிகள் செறியும் அம்மண்டபத்தில்,

சுற்று நீடிய தோழியர் கவரிசாந் தாற்றி
பற்றி நின்றிரு பாங்கரும் பணிநனி புரியச்
சற்றி ருந்திளைப் பாறினாள் எழுந்துமீத் தருக்கு
முற்றி லாமுலை அந்நலார்க் கின்னது மொழிவாள்.  315

     பல் புறமும் நின்ற தோழிமார் கவரி, சிவிறி இவை பற்றி நின்று
இருபுடையும் திருத்தொண்டு நன்கு புரியச் சிறிது இருந்து அயாவுயிர்த்தனர்.
பின்பு மேலெழுந் திறுமாக்கின்ற இளங் கொங்கையை யுடைய பாங்கியர்க்
கிதனைக் கூறுவார்.

மன்னு யிர்த்தொகை முழுவதும் மாயையின் மறைப்புண்
டின்னல் செய்திரு வினைவலைப் படுங்கள்இவ் வினைதாம்
உன்னை எம்மைஎம் அடியாரைப் பிணிப்பதொன் றில்லை
அன்ன தாயினும் அகிலமுந் தெளிந்துய்தற் பொருட்டு.    316

     ‘நித்தியமாகிய ஆன்மாக்கள் முழுதும் மாயையினால் மறைப்புற்றுத்
துன்பம் செய்கின்ற புண்ணிய பாவங்களாகிய விலங்கில் கட்டுண்ணும்,
இவ்வினை உன்னையும், எம்மையும், நம் அடியவரையும் சிறிதும்
பற்றுவதில்லை. ஆனாலும் பல்லுயிர்களும் தெரிந்து கடைத்தேறும்
பொருட்டு’

ஆட லான்விழி புதைத்தலின் ஆரிருட் படலம்
மூட யாவையும் இடர்க்கடல் மூழ்கிய அதனால்
கூடும் வல்வினை கழுவுறக் காஞ்சியைக் குறுகி
நீட நீஎமை அருச்சனை இயற்றுதி நெறியால்.     317

     திருவிளையாட்டாற் கண்களை மூடினமையால் தாங்கரிய இருட்புழம்பு
உலகெலாம் மூடிக்கொள்ள பல்லுயிர்களும் துன்பக்கடலில் மூழ்கியமையால்
சேர்ந்த தீவினை தீரக் காஞ்சியை அண்மி நிலைபெற நீ விதிவழி அருச்சனை
செய்.

       85