68காஞ்சிப் புராணம்


     காஞ்சியில் பிறந்தும் செல்வத்தில்மூழ்கியும் குலச்சார்பால் நோயர்
எனினும், இழிஞராயினும், சில பொருள் கிடைப்பினும் கொள்வர் என
இழிந்த நிலையைச் சிறப்பித்தவாறு. வேறு பொருள் சிறக்குமேற்கொள்க.

அலைவிழிக் கணிகை நல்லார் ஆடவர் தமக்கு நல்கும்
இலைநிக ரெனுமின் பத்திற் கின்பமும் சமமாகக் கொண்டு
விலையென நிதியுங் கோடல் வியப்பிற்றே ஏற்ற மாக
மலைநிகர் தனங்கள் ஈந்தோர் மலைநிகர் தனமுங் கொள்வார்.  54

     பரத்தையர், ஒப்பில்லாத இன்பத்தை ஆடவர்க்குக் கொடுக்கும்
வகையே தாமும் சமமாகக் கொண்டும் மேலும், விலையெனப் பெரும்
பொருளை மிகையாகப் பெறல் அதிசயிக்கத் தக்கது. மலையை ஒத்த
கொங்கைகளை (போகத்தை) ஈந்து ஓர்மலை எனத் தக்க பொருளை
அவ்வாடவரிடத்துப் பெறுவர்.

     ‘கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே
உள’ (திருக்- ) இலை நிகரெனும் இன்பம் என்று கூறினர்.

தவமறைக் கிழவன் மாயன் தாணுவென் றிவரும் இவ்வூர்க்
கவர்மனப் பரத்தை மாதர் கண்வலைப் பட்டே இன்றும்
இவறிய அலரோன் மாலோன் பித்தனென் றிப்பேர் பெற்றார்
சிவசிவ யாவ ரேயோ அவர்திறத் தகப்ப டாதார்.      55

     தவநெறிக்கு வித்தாய மறைக்குரிய பிரமனும், திருமாலும், சிவபிரானும்
இருமனப் பெண்டிர் தம் கண்ணாகிய வலையில் பட்டே இன்றும் இறுகப்
பற்றிய அலரோன், மாலோன், பித்தன் என்ற இப்பெயர்களைப் பெற்றனர்.
அவர் சார்பிற்படாதார் யாவரே! சிவ சிவ!

     அலரில் இருப்பவன், மாயையால் உயிர்களை மயக்குபவன்
(பெருமையுடையவன்) ‘பெருங் கருணையாளன்’ எனும் பொருளில் அமைந்த
பெயர்களை பழிச்சொல் உடையவன், மயக்கமுடையவன், பித்துடையவன்
எனும் பொருளில் காமத்தால் இந்நிலையடைந்தனர் என்ப. சிவ சிவ
இரக்கக்குறிப்பு. மும்மூர்த்திகளைக் காட்டிப் பிறர் எவர் இவர் வலையில்
வீழாதார் என்பார் ‘ஓ’ எனும் இரக்கக் குறிப்பையும் காட்டினர்.

விற்றிடும் அல்குல் தன்னை மீளவுந் தமதே யாக்கி
மற்றைய நாளும் விற்கும் வரைவிலார் வீதி இச்சீர்
கற்றிலா வணிக மாக்கள் ஆவணக் கவினை நோக்கிப்
பற்றுவெண் டரளக் கோவைப் பத்தியால் சிரிக்கும் மன்னோ.  56

     தம்மை ஓரொருவர்க் குரிமைப் படுத்தி விலைகொண்டு, மற்றைய
நாளும் இங்ஙனமே அவ்வுடம்பை விலைப்படுத்தும் பொருட் பெண்டீர்
வீதி, இச்செயலைக் கல்லாத வணிகர் தம் கடைவீதியின் அழகை நோக்கி
முத்தமாலை வரிசைகள் எள்ளிநகும்.