அம்மையார் வழிபாடு செய்ய எழுந்தருளல் கலி விருத்தம் இன்னணம் பணியெலாம் இகுளை மார்செய மின்னவிர் மணிவடம் சுமந்த வெம்முலைக் கன்னிமா மண்டப நின்றுங் காதலால் கொன்உமா பத்திரக் கூவல் நண்ணினாள். 342 | இங்ஙனம் எல்லாத் தொண்டுகளையும் சேடிமார் செய்ய ஒளி விளங்கு மணி மாலையைச் சுமக்கும் கன்னி வடிவில் திகழும் அம்மையார் மகா மண்டபத்தினின்றும் காதலுடன் பெருமையுடைய உமாபத்திரக் கிணற்றை நீராட நண்ணினர். நிறைபரஞ் சுடரடி நினைந்து கூவல்நீர் மறைநெறி விதியுளி வழாமை ஆடியே இறுநுசுப் பந்நலார் எடுத்து நீ்ட்டிய அறுவையின் ஒற்றிமெய் ஈரம் மாற்றினாள். 343 | சிவபெருமானார் திருவடிகளை நினைந்து நீராட்டு விதிப்படி நீராடி இடை முரியும் கொல்லோ என்னும் சிற்றிடைப் பாங்கிமார் கொடுத்த ஒற்றாடையினால் திருமேனி ஈரத்தைப் போக்கிக் கொண்டனர். தேசிகப் பட்டிரண் டுடுத்துத் தீவினை ஆசிரித் தருளும்நீ றாக மெங்கணும் பூசிமுப் புண்டரம் பொறித்துக் கண்டிகை நேசமுற் றணிந்துசெய் நியமம் முற்றியே. 344 | அம்மையார் ஒளியுடைய பட்டாடை இரண்டினை உடுத்துத் தீய வினையாகிய குற்றத்தைப் போக்கி அருள் செய்யும் திருநீற்றினை மேனி முற்றும் பூசி நீரிற் குழைத்துத் திரிபுண்டரமாக அணிந்து உருத்திராக்கத்தை விருப்பொடும் தரித்து அனுட்டானம் செய்து கொண்டு, காவலர் பூசனை புரியுங் காதலான் மேவர வேண்டுவ கொண்டு மெல்லியல் பாவையர் புடைவரப் படர்ந்தி ரண்டெனும் ஆவர ணந்தனை அணுகி னாளரோ. 345 | சிவபூசனையைப் புரியும் விருப்பினால் வேண்டும் உபகரணங்களைக் கொண்டு மெல்லியலார் தோழிமார் உடன் வர இரண்டாம் ஆவரணத்தினை அணுகினர். சங்கினம் வயிரொடு தாரை காகளம் பொங்கொலிச் சின்னங்கள் வீணை பூங்குழல் வங்கியம் பேரிவார் முரசம் திண்டிமம் எங்கணும் கடலுடைந் தென்ன ஆர்ப்பவே. 346 | |