பெருங்களி துளும்பிஉள் புகுந்து பிஞ்ஞகர் மருங்குற முறைமுறை வணங்கி ஏத்தினாள். 351 | ஐம்பொறி வழிச் செல்லாது ஒன்றுபட்ட உள்ளத்தினால் அஞ்செழுத்தையும் ஓதிக் கரிய கூந்தற் றொகுதிமேற் கூம்பிய கரத்தொடும் துள்ளிய பெருங்களிப்பொடும் உள்ளே புகுந்து அருகணைய விதித்தபடி வணங்கி வணங்கித் துதித்தனர். முருகலர் மாவடி முளைத்த தீஞ்சுவை அருள்விளை அமுதினை ஆரக் கண்களால் பருகினள் பன்முறை பழிச்சி அண்ணலார் கருணையே நோக்கிவெங் களிப்பின் நீடினாள். 352 | வாசனை விரியும் மலர்களைக் கொண்ட மாவின் அடியில் வெளிப்பட்ட இனிய சுவையுடைய திருவருளைச் செய்யும் அமுதாகிய பெருமானாரைக் கண்களால் நிரம்பப் பருகினர், பலமுறை போற்றி அண்ணலார் திருவருளையே உளங்கொண்டு களிப்பி லழுந்தினர். விழிகள்ஆ னந்தநீர்த் தாரை மெய்யெலாம் பொழியநெக் குருகினள் புளகம் போர்த்தனள் மொழிதடு மாறினள் அறிவின் முற்றிய தொழில்அமை பூசனை தொடங்கல் மேயினாள். 353 | கண்கள் ஆனந்த வெள்ளத்தை மெய்ம்முழுதும் பொழியுமாறு திருவுள்ளம் நெகிழ்ந்து உருகினர்; புளகம் மூடினர்; நாக்குழறினர்; அறிவின் முதிர்ந்த பணியாகிய பூசனையைத் தொடங்கலுற்றனர். அம்மையார் வழிபாடு செய்தல் அறுசீரடி யாசிரிய விருத்தம் வழுவறு தோற்ற மாதி வழுக்கிய பாவத் தீமை கழுவநின் பூசை இந்நாள் கடைப்பிடித் தருளால் செய்கேன் முழுதருள் வழங்கி ஊறு நீக்கிமுன் னின்று கோடி செழுமதி முடியாய் என்று சங்கற்பம் செய்து கொண்டாள். 354 | பிறையை முடித்த பெருந்தகையே! குற்றமற்ற படைப்பு முதலிய தொழில்கள் தடைப்படத் திருக்கண்களைப் புதைத்தமையால் ஆகிய கொடிய தீவினையைப் போக்க நின் பூசனையை இப்பொழுது மேற்கொண்டு திருவருளை முன்னிட்டுச் செய்வேன். இடையூறகற்றி முழுதும் அருளை வழங்கி முன்னின்று பூசனையை ஏற்றுக் கொள்ளுதி, பூமுதல் பூத சுத்தி புரிந்தகப் பூசை ஆற்றிக் காமரு மலரும் வாச வருக்கமும் கலந்த தெண்ணீர்த் தோமில்பாத் தியமே ஆச மனம்அருக் கியந்தூய் தாக்கி மாமுரல் இதழித் தாரார் முடிமிசை மலரை மாற்றி. 355 | |