துன்புற நோக்கி நெஞ்சந் துண்ணெனத் துளங்கி ஆவா உம்பர்வான் தடவிச் செல்லும் ஒப்பரும் பெருநீர் வெள்ளம் எம்பிரான் மிசையே நண்ணும் இனிச்செய்வ தென்னே என்று தம்பிரா னார்பால் அன்பு தழைந்தெழும் உள்ளத் தோடும். 376 | வருத்தம் மிக நோக்கி மனந் திடுக்கிட்டுக் கலங்கி அந்தோ! வான் விசும்பைத் தடவிப்போகும் உவமம் இல்லாத பெருநீர் எமது பெருமான் மேல் நணுகும். இனிச் செய்யத் தக்கது என்னோ! என்று உயிர்களின் தலைவர் மாட்டுப் பொங்கி எழும் அன்புடைய உள்ளத்தோடும், அட்டொளிப் பசும்பொன் மேனி வடிவெலாம் அதிர்ப்புக் காட்டப் பொட்டணி நுதலின் பாங்கர்க் குறுவெயர்த் திவலை பூப்ப மொட்டிள முலையில் தூங்கும் முத்தொளி வடங்கள் ஆட இட்டிடை வருந்திச் சால இறுமெனத் துவண்டு வாட, 377 | சுடப்பட்ட ஒளியுடைப் பசிய பொன்னொக்கும் திருமேனி வடிவ முற்றும் நடுக்குறவும், திலக மணிந்த நுதலில் குறுவெயர் வரும்பவும், அரும்பனைய இளைய கொங்கைகளில் தொங்கும் முத்தமாலைகள் அசையவும் சிறிய இடை பெரிதும் வருந்தி முரியுமெனத் தளர்ந்து வாடவும் கூந்தலின் நறவந் தோய்ந்த குருமலர்ச் சுரும்பர் ஆர்ப்ப ஏந்தகல் அல்குல் சூழ்ந்த எரிமணிப் பருமம் ஆர்ப்பச் சேந்தொளி பிலிற்றுஞ் செம்பொற் கிண்கிணி சிலம்போ டார்ப்பக் காந்துபொற் கடகக் கையிற் கதிர்வளைக் குலங்கள் ஆர்ப்ப 378 | கூந்தலில் தேன் மருவிய நிறமுடைய மலரில், வண்டுகள் ஆரவாரிக்கவும், ஏந்தி அகன்ற அல்குலின் மேலிட்ட ஒளிவிடு மணிமேகலை ஆரவாரிக்கவும், சிவந்து சுடர் விடும் செம்பொன்னா லாய கிண்கிணியும் சிலம்பும் ஆரவாரிக்கவும், ஒளி வீசுகின்ற பொன்னாலாய கடகமணிந்த கையில் வளைகள் ஆரவாரிக்கவும், ஒருகொடி எழுந்து செம்பொன் உயர்வரைக் குவடு தன்னை இருகொழுந் திருபாற் போக்கித் தழீஇயென எழுந்து வல்லே முருகலர் வேதி உம்பர்த் தன்வல முழந்தாள் ஊன்றிக் கருமணிப் பாவை யன்னாள் கணவரைத் தழுவிக் கொண்டாள். | ஓர் பொற்கொடி வளர்ந்து மேரு மலைச் சிகரத்தை இருதளிரை இருபுறமும் செலுத்தித் தழீஇக் கொண்டாற்போல விரைய எழுந்து மணம் விரியும் சிவலிங்க பீடத்தின்மேல் தம்முடைய வலது முழந்தாளை ஊன்றி நீலமணியாற் செய்யப் பெற்ற படிமத்தை ஒப்பவர் கணவரை இறுகத் தழீஇக் கொண்டனர். |