திருநகரப் படலம் 69


     இச்சீர் கல்லாமை, பொருளைக் கொடுத்துப் பொன்பெறல். வீதி
தன்னுறுப்பாகிய முத்தமாலைகளின் ஒளிவீசுதலைப் பிறர் பேதைமையைக்
கண்டு சிரிக்கும் என்றனர்.

இருமைவா ணிபத்தில் கூர்த்த மதியரும் இறும்பூ தெய்த
அருவமாம் இன்பந் தன்னை இம்மியின் அளவும் ஏறா
துருவமாம் பொருளுக் கேற்ப நிறுத்துவிற் றொழுக வல்ல
இருமனப் பெண்டீர் தம்முள் தருக்கிவாழ் இருக்கை ஈதால்.   57

     இருவகை வியாபாரத்தில் கூரிய அறிவுடையவரும் வியப்புறக்
கண்ணிற்குப் புலனாகாத இன்பினை மத்தங்காய் புல்லரிசியின் அளவும்
மிகாது புலனாகும் பொருளுக்குத் தக அளவுபடுத்தி விலைப்படுத்தி
நடாத்துதலில் வல்ல இருமனப் பெண்டீர் தம் முள் தாமே அறிந்து
செருக்கி வாழும் இருப்பிடம் இது.

     இருமை-இருசெயல்; அவை கொடுத்தலும், கொள்ளலும். செருமுகத்து
வெற்றியான் வருவது செருக்கு; தருதலான் (கொடை) வருவது தருக்கு என்க.

கடை வீதி

இன்னஈங் குளவோ என்னக் கடாதலும் இயம்பி யோர்கட்
கன்னஇங் குள்ள இல்லென் றிறுத்தலும் அறியா தியாரும்
என்னவுந் தருதி ரென்ன விலைகொடுத் தேற்ப ஈய
மன்னிஎப் பொருளும் என்றும் நிறையும்ஆ வணம் அனந்தம்.  58

     இவ்வியல்பின இங்குளவோ என வினாவவும், அத்தன்மையன
இங்குள்ளன; அன்றி இல்லை என்ன விடை கொடுத்தலும் அறியாமல்
எவரும் எப்பொருளையும் விலையைக் கொடுத்து ஏற்பவும், வணிகர்
கொடுப்பவும் ஆக எப்பொருளும் எப்பொழுதும் நிறைந்து நிலைபெறும்
கடைவீதிகள் அளவில்லன.

செய்வினை அனைத்தும் தன்பால் சேர்த்துவைத் துயிர்க்குப் பின்னர்
அவ்விறை ஆணையாற்றால் அளித்திடு மாயை யேபோல்
கொய்வளம் வருவ முற்றுங் கொண்டுபின் நாய்கர் மாறப்
பௌவநீர் உலகுக் கெல்லாம் உதவுவ பைம்பொன் மாடம்.    59

     உயிர்கள் செய்த இருவகை வினைகள் முற்றவும் தன்னிடத்து முன்னர்ச்
சேர்த்து வைத்து அவ்வுயிர்களுக்குப் பின்னே முதல்வன் தனது சிற்சத்தி
கூட்டுகின்ற முறையால் கொடுக்கின்ற மாயையைப் போல, உழைத்துத்
திரட்டியவளப்பமுற்றும் வருவனவற்றைக் கொண்டு பின்னர் வணிகர்,
விலைப்படுத்தக் கடல் சூழ்ந்த உலகினர்க்குப் பொன் முதலாம் பொருளுடைய
மாடங்கள் உதவுவன.

     மா-ஒடுங்குதல். யா-வருதல். ஒடுங்கி வருதல். சூக்கும நிலையில்
உலகம் ஒடுங்கிப் பின் மாயையில் வெளி வருதலின் மாயை எனப் பெற்றது.
உமா-உமை, சீதா-சீதை போல மாயா, மாயை என ஆயிற்று. மாடம்-
மாடுடைய இடம் மாடம். மாடு-செல்வம்.