704காஞ்சிப் புராணம்


     முத்து மாலைகளின் நடுவே நடுவே குற்றமில்லாத கண்ணாடிகளும்,
குறைவற ஒளி வீசும் வெண்சாமரைகளும், மலர்ப் பிணையல்களும்,
தேனூறுகின்ற பல் பழங்களும் அழகு பெருகுகின்ற நிலைமையில்
அசையத்தூக்கிக் கட்டினர

நெட்டிலைக் கதலியும் நீலப் பூகமும்
மட்டுமிழ் கன்னலும் வானில் தாருவும்
விட்டொளி எரித்திருள் விழுங்கு தூண்தொறும்
கட்டினர் மலர்கனி காய்கள் ஈனவே.            11

     விட்டு விட்டு ஒளி வீசி இருளைப் பருகும் தூண்கள் தோறும் நீண்ட
இலைகளையுடைய வாழை மரங்களும், பசிய பாக்கு மரங்களும், சாறு
பெருகுகின்ற கரும்புகளும், கற்பக முதலிய தருக்களும் ஆகிய இவை
மலர்களையும், பழங்களையும், காய்களையும் ஈனுமாறு கட்டினர்.

கொடிகளுந் தாருவுங் கோணைப் பொய்கையும்
வடிவுடைக் கிளிபுறா மஞ்ஞை மற்றவும்
சுடர்பல நிறங்களுந் தொகுத்தி லேகித்த
விடுகதிர்ப் பட்டினால் விதானஞ் செய்தனர்.      12

     பூங்கொடிகளும், பூமரங்களும், கோணங்களமைந்த நீர் நிலைகளும்,
அழகிய கிளிகளும், புறாக்களும், மயிலும், பிறவும் ஒளியுடைப் பல
நிறங்களையும் கூட்டிச் சித்திரித்த ஒளி வீசுகின்ற மேற்கட்டி தூக்கினர்.

முத்தொளி மாலையும் மூரிப் பன்மணிச்
சித்திர மாலையும் செம்பொ னாற்செயும்
தத்தொளி மாலையும் ததைந்து வண்டுலாம்
தொத்தலர் மாலையும் துவன்றத் தூக்கினார்.      13

     ஒளியுடை முத்து மாலைகளும், பெருமையமைந்த நவரத்தின
மாலைகளும், ஒளி தவழும் செம்பொன்னாலாகிய மாலைகளும், வண்டுகள்
செறிந்துலாவும் கொத்துக்களில் அலர்கின்ற பூமாலைகளும் ஆகிய இவற்றை
நெடுகத் தூக்கி யாத்தனர்.

நாப்பணின் எம்பிரான் நங்கை யோடுறை
பூப்பொலி மணியணை பொருத்திப் பாங்கெலாம்
மூப்புடை விண்ணவர் முனிவர் வைகிட
ஏற்புடை அணைகளும் இட்டு வைத்தனர்         14

     அம்மண்டபத்தின் நடுவில் எமது பெருமான் உமையம்மையாரொடும்
உடனுறைதற்கு மலர்களாற் பொலியும் அழகிய தவிசமைத்துப்
பக்கங்களிலெல்லாம் உயர்வுடைய தேவரும் முனிவரும் பிறரும் இருந்திட
அவரவர்க்குத் தக்க இருக்கைகளையும் கொணர்ந்திட்டனர்.

     மூப்பு-உயர்வு; ‘விண்ணோர்க்கெல்லாம் மூப்பாய்’