தாமம் நாற்றித் தமனிய வேதியிற் பூமென் நீர்நிறை பூரண கும்பமும் காமர் பாலிகை யுங்கதிர்த் தீபமும் தூம முந்தொகுப் பார்இடந் தோறுமே. 23 | மாலைகளை அளவாக அறுத்துத் தொங்கவிட்டுப் பொற்றிண்ணைகளிற் பூக்கள் நிரம்பிய நீர் நிறைந்த நிறைகுடங்களும், அழகிய முளைப் பாலிகைகளும், சுடரையுடைய விளக்குகளும், புகைகளும் இடங்கள் தோறும் நிரப்புவர். நித்தி லத்தினை நீற்றுபு வேதியிற் சித்தி ரித்துச் செழும்பொனின் மாளிகைப் பித்தி ஓவியம் பெட்பப் புதுக்குவார் பத்தி மாடம் பழுதொழித் தாக்குவார். 24 | முத்துப்பொடியால் மேடைகளிற் கோலமிட்டு மாளிகைகளிற் செழும் பொன்னாலாகிய சுவர்களிற் கண்டோர் விரும்பும்படி புதிதாக்குவர். வரிசையாக அமைந்த மனைகளிற் பழையனபோக்கிப் புதிதாக எடுப்பர். இருக வுள்துளை ஈர்ங்கலு ழிக்கடக் கரிகள் பண்ணுவர் கால்விசைத் தோடுவாம் பரிகள் பண்ணுவர் பார்குழி ஆழியின் இரதம் பண்ணுவர் எங்கணும் எண்ணிலார். 25 | இரண்டு கன்னத் துளைகளினின்றும் ஒழுகுகின்ற மத நீர்ப் பெருக்கினையுடைய யானைகளை அலங்காரம் செய்வர். கால் வாங்கி விரைந்தோடுகின்றதாகவும், குதிரைகளை அலங்கரிப்பர். பூமியைக் கிழித்தோடுகின்ற சக்கரங்களையுடைய தேர்களை ஒப்பனை; செய்வர். இங்ஙனம் யாண்டும் ஒப்பனை செய்வோர் அளப்பிலராவர். நீண்ட பொன்னிலைத் தேர்கள் நிறுத்துவார் மாண்ட தூண்தொறும் வாருறை சேர்த்துவார் ஈண்டு வார்கட் கிடம்பல ஆக்குவார் வேண்டி யார்க்கு விருந்து திருத்துவார். 26 | பொன்னின் வேலைப்பாடமைந்த தேர்களைக்கொண்டு வந்து நிறுத்துவார். மாட்சிமையுடைய தூண்களுக்கெல்லாம் நீண்ட உறைகளைப் போர்ப்பர். வரும் விருந்தினர்கட்கிடமுண்டாகப் பொருள்களைத் தொகுப்பர். விரும்பி வந்தோர்க்கும் விருந்தமைப்பர். |