710காஞ்சிப் புராணம்


     ஒளிமயமாய் விளங்கும் மேருமலையில் பெயர்த்து எடுத்து
நுண்பொடியாக்கிய பொற்சுண்ணத்தைத் தேவதருக்களிற் பெற்ற மலர்களின்
மகரந்தப்பொடியொடு கலந்து திருமேனிமேல் அப்பி வாசனைப் பொருள்களை
உண்டு உமிழும் நறும்புகையை ஈரம் வற்றுமாறு அன்பொடும் படிவித்து,

அரிக்குரற் சிலம்பு போற்றும் அடியவர் மலங்கள் மூன்றும்
இரிக்குஞ்செங் கமலப் பாதத் திணக்கிவல் லிருளை யெல்லாம்
பொரிக்கும்விற் பிழம்பு காலும் பொலங்கழல் நரல வீக்கிப்
பரிக்கும்பட்டுடைமேல் ஒண்கல் பதித்தபொன் அரைநாண்சாத்தி.  34

     துதிக்கும் அடியவருடைய மும்மலங்களையும் கெடுக்கும் செந்தாமரை
மலரைப் போலும் திருவடிகளில் உள்ளிடு பரல் ஒலிக்கும் சிலம்பினைப்
பொருத்தி வலிய இருளை முற்றவும் கெடுக்கும் ஒளித்திரளை வீசும்
பொன்னாலாகிய வீரக்கழலை ஒலிக்கும்படி பூட்டி, வீக்கும் பட்டாடைமேலே
சுடர்விடு மணிபதித்த பொன்னரை நாணை இடையில் பூட்டி,

கதிர்உமிழ் பதும ராக உதரபந் தனங்கால் யாத்துப்
புதியநித் திலப்பூங் கோவை பொன்னரி மாலை தண்தார்
எதிரறு சன்ன வீரம் இலைமுகப் பைம்பூண் முந்நூல்
முதலிய மார்பின் வார்ந்து முதிரொளி எறிப்பச் சாத்தி.    35

     ஒளி உமிழும் பதுமராகம் பதித்த வயிற்றுக்கட்டினை வீக்கி,
முத்துமாலைகள், பொன்னரிமாலைகள் பூமாலைகள், சன்ன வீரம், வெற்றிலை
முகம்போலும் அச்சவடிவாகச் செய்யப்பட்ட ஆபரணங்கள், செம்பொற்
பூணூல் முதலிய அணிமணிமாலையைச் சாத்தி, ஒளி பெற்று விளங்கும்
நாகரத்தினம் வைத்திழைக்கப் பட்ட மோதிரங்களை விரல்களுக்கெல்லாம்
கோத்தணிந்து, திண்ணிய வயிரத்தால் செய்யப் பெற்ற கடகத்தை
முழங்கையிற் செறித்து, கதிர் எறிக்கின்ற வாகுவலயங்களைத்
தோள்களிற்சாத்தி,

மணிவடங் கழுத்திற் சாத்தி வாள்கிடந் திமையா நிற்கும்
பணிஉமிழ் மணியிற் செய்த ஆழிபல் விரலுங் கோத்துத்
திணிவயி ரத்திற் செய்த கடகங்கூர்ப் பரத்துச் சேர்த்துத்
துணிகதிர் முத்திற் செய்த அங்கதந் தோளிற் பூட்டி.    36

     திருக்கழுத்திலே நவமணி மாலையைச் சாத்தி, ஒளி பெற்று விளங்கும்
நாகரத்தினம் வைத்திழைக்கப்பட்ட மோதிரங்களை விரல்களுக்கெல்லாம்
கோத்தணிந்து, திண்ணிய வயிரத்தாற் செய்யப்பெற்ற கடகத்தை முழங்கையிற்
செறித்து, கதிர் எறிக்கின்ற வாகுவலயங்களைத் தோள்களிற் சாத்தி,