திருநகரப் படலம் 73


     சில, பல வீதிகளின் பேரழகைக் காணும் விருப்பினால், எங்கள்
நாயகனும், ‘திருவிழா’ என ஏறட்டுக்கொண்டு அம்மையும், மைந்தரும்
அடியவரும் சூழத் தேவரும் போற்றத் திங்கள்தோறும் திருவோலக்கம்
கொண்டருளுவராயின் அந்நகரின் சிறப்புச் சொல்லில் அடங்கும் சிறிய
அளவினதோ; அடங்காப் பெருமையது.

     திங்கள்-திங்கட்கிழமை, மாதம். சண்டேசப் பெருமானுடன் என

     உம்மையாற்கொள்க. ‘விருப்பொன்றில்லான் விரும்பினன்’ என நகரின்
சிறப்புக் கூறினர்.

பாலி யேமுதல் பலநதித் திவலைபாய்ந் தழகின்
பால வாயமா ளிகைஅடித் தலத்தினைப் பாராப்
பால வெண்சுதை மாடமேற் சிகரமும் பனிவிண்
பாலி யாற்றுநீர்த் திவலைகள் போர்ப்பவான் படரும்.    71

     பாலி முதலான பல நதிகளினுடைய அலையெறி துளிகள் பாய்தலான்
அழகின் பாற்பட்ட மாளிகைகளின் அடியிடங்களைப் பால்போன்ற
வெண்மையான சுண்ணாம்பாலியற்றப் பெற்ற மாளிகைகளின் சிகரங்கள்
நோக்கித் தாமும் குளிர்ந்த விண்ணிடத்துக் கங்கை நீர்த்துளிகள்
போர்வைபோலப் பொதிந்துகொள்ள விசும்பை நோக்கி எழும்.

     விண்பால்யாறு-விண்ணிடத்துள்ள நதி; கங்கை.

பன்னி றப்பரி கருங்கரி தொழிலமை பஃறேர்
இன்ன கீழ்நிலை வாயிலின் இயங்குதல் நோக்கி
மன்னு மேல்நிலை வாயில்வெண் கரிபசு மான்தேர்
அன்ன ஏனவுந் தன்னிடத் தியங்கவான் அணவும்     72

     பல நிறங்களமைந்த குதிரைகளும், யானைகளும், தொழிற்றிறங் கூடிய
பலவாகிய தேர்களும் இத்தன்மையவாகிய பிறவும் கீழ்நிலை வாயில்களின்
வழிக்கொடு போதல் வருதல்களை நோக்கி, நிலைபெறும் மேல் மாடங்களின்
அமைந்த வாயில்களை வெள்ளையானை (ஐராவதம்), பச்சைக் குதிரை
பூட்டிய தேர், அவைபோல்வன பிறவும் தன் வழியாகப் புடை பெயர
வானைத்தோயும். சூரியன் குதிரை பச்சை நிறம் உடைமை:

     ‘‘இரவிபசும் புரவி” (கலிங் 85). ‘‘தனியாழித் தனிநெடுந் தேர்த்
தனிப்பச்சை நிறப்பரியை.................பனிப்பகைவன்” (வி.பா.வச.1)

அலங்கு கீழ்நிலை மாடம்அங் கடுப்பினின் மாட்டும்
இலங்க கிற்புகை யான்விரை யேற்றுவர் மடவார்
புலங்கொள் மேல்நிலை மாடமும் புரிகுழற் கூட்டுந்
துலங்க கிற்புகை யான்மணங் கஞலுறத் தொகுப்பார். 73

     மகளிர், அடுப்பினில் எரிக்கும் அகில் விறகால் சூழும் நறும்புகையைச் சுடர்விடுகின்ற கீழ் மாடிகளில் பரப்புவர்; இடங்கொண்ட மேல் மாடங்களில் கூந்தற்கு ஊட்டும் அகிற்புகையான் மணஞ்செறியச் சேர்ப்பர்.