பிறரை இரவாமல் வருபொருள் அமிருதம் எனப்படும். யாசித்துப் பெறின் அது மிருதம் ஆகும். உழவாற் பெற்றது பிரமிருதம். சத்தியா நிருதம் வாணிக விருத்தி தாழ்வுறுஞ் சேவகஞ் செய்யல், வைத்தநாய் விருத்தி ஆதலின் அதனை மாற்றியே இருபிறப்பாளர், ஒத்ததோர் தூய விருத்தியால் தம்மை ஓம்பிமெய்ந் நூல்பல பயின்று, தத்தமக் குரிய நியதியின் ஒழுகித் தங்குதல் மரபெனப் படுமால். 37 வாணிகத்தால் வாழ்தல் சத்தியாநிருதம் ஆகும். தாழ்வு மிகும் சேவகம் எனப்படும் பிறர் ஏவலின் நின்று வாழ்தல் நாய்விருத்தி ஆகும். அந்நாய் விருத்தியை விலக்கி முதல் மூன்று வருணத்தவரும் தமக்குப் பொருந்தியதோர் நல்வழியால் தம்மைக் காத்து மெய்ப்பயனைக் காட்டும் நூல்கள் பலவும் பயின்று தத்தம் வருணத்திற்கு விதித்த வழியில் நடந்து அடங்குதல் வழக்கு ஆகும். கைசெவி சென்னி கழுத்தின்எப் போதுங் கண்டிகை அணிதல்வெண் ணீறு, மெய்யெலாம் பூசி ஐந்துமூ விடத்தும் விலங்குமுப் புண்டரம் பொறித்தல், வைதிக நிலையோர் மரபென மறைநூல் வகுத்திடும் ஆதலின் இவற்றைக், கைவிடா தென்றுங் கடைப்பிடித் திடுக இகழ்ந்திடிற் கடையரே யாவார். 38 கைகள், காதுகள், கழுத்து ஆகிய இவ்விடங்களிலும், தலைமேலும் எப்பொழுதும் உருத்திராக்க மணிதலும் வெண்ணீற்றை மேனி முற்றும் பூசிப் பதினைந்திடங்களில் ஒளி விடுகின்ற திரிபுண்டரம் தீட்டுதலும் வைதிக வழக்கினர் இயல்பென நூல்கள் இயம்பும் ஆகலின் இவற்றை வெறுத்தொதுக்காது எந்நாளும் கைக்கொண்டொழுகுக. பழித்திடில் கீழோரே ஆவர் அவர். வைதிக சைவ நெறிகளைப் பற்று மாண்பிலாச் சூத்திரர் முதலோர்க், கைதுமீப் போய புண்டர மாதி அணியலாம் ஏனையர்க்காகா, மெய்திகழ் மறைகள் ஆகமம் விதித்த கருமம்மற் றினையன பிறவும், உய்தியை வேட்டோர் ஆசரித் தொழுகி விலக்கின ஒழிவது முறையே. 39 வேதநெறி சைவநெறிகளைப் பின்பற்றுதற்குரிய மூவருணத்துட் பிறக்கும் பேறில்லாத சூத்திரர் முதலானோர்க்கு ஊர்த்துவ புண்டரம் முதலாக அணிதல் தகும். பிறர்க்கு அங்ஙனம் அணிதல் தக்கதன்று. உண்மை விளங்கும் வேதாகமங்கள் விதித்த கருமங்கள் ஆகிய இங்குக் கூறியவும் பிறவும் கடைத்தேறுதலை விரும்பினோர் கைப்பற்றி நடந்து, விலக்கிய தீயவழிகளைக் கைவிடுதல் தக்கதென்க. |