அடித்துணை நிலத்தில் நோக்கி மிதித்திடல் அறுவை தன்னில் வடித்தநீர் பருகல் நெஞ்சில் தூயது மாணக் கோடல் படிற்றுரை யின்றிக் கூறல் நன்மையே பயப்பப் பேசல் எடுத்துரை பிறவும் முத்தன் இலக்கணம் என்ப மன்னோ. 61 | ஓரறி வுயிர்க்கும் உறு துயரை மதித்து நிலத்தைப் பார்த்து நடத்தல் (தலைதாழ்த்தலுமாம்), ஆடையால் வடித் தெடுத்த நீரைப் பருகல், நன்னினைவை உறுதியாகக் கொள்ளுதல், மெய் பேசல், பிறர்க்கு நலம் பயப்பவற்றையே பேசுதல், எனப்படும் இவையும் எஞ்சிய பிறவும் சீவன் முத்தன் இலக்கணம் என்று கூறுவர். உறையுளோ டங்கி பேணல் கல்வியின் உடலை ஓம்பல் சிறையுடற் பொருட்டுச் சீற்றஞ் செய்திடல் சாலப் பேசல் புறனுரை இகழ்ச்சி பிச்சைப் பொருட்டல தூர்க்குட் சேறல் மிறையுறுத் திடும்பை செய்வோர் தம்மையும் வெகுள லாகா. 62 | ஓரிடத்தில் நிலையாக இருத்தலும், எரியோம்பலும், கற்றகல்வியை விற்று வயிற்றை வளர்த்தலும், உயிர்க்குச் சிறையாக அமைந்த இவ்வுடம்பை வளர்த்தற் பொருட்டுச் சினங் கொள்ளலும், மிகுதியாகப் பேசுதலும், புறங்கூறலும், பழித்துரையும், பிச்சைப் பொருட்டன்றியும் ஊர்க்குள் புகுதலும், துன்புறுத்துவோர் தம்மையும் வெகுளுதலும் ஆகாவாம். சினவிடைக் கடவுள் பூசை கண்டிகை திருவெண் ணீறு கனவினும் இகழா தோம்பல் கதிரொளி உலோகம் அல்லாப் புனிதபா சனத்தின் நீரால் தூய்மைகள் பொருந்தக் கோடல் வினைஇகந் தவர்க்காம் என்ப வேள்வியிற் சமசம் போலும். 63 | சிவபூசனையும், உருத்திராக்கத்தையும், திருவெண்ணீற்றையும் நனவினும், கனவினும் மதித்துப் போற்றுக. ஒளியுடைய உலோகங்கள் அல்லாத மரம், மண் இவற்றால் ஆய தூய பாத்திரத்தால் நீராடல் முதலியன வினைகளை ஒழித்த சீவன் முத்தர்க்கு ஆகும். வேள்வியிற் கொள்ளும் மரப் பாத்திரம் போலும் என்க. என்பினை நரம்பிற் பின்னிக் குடர்வழும் பிறைச்சி மெத்திப் புன்புழுப் பொதிந்து செந்நீர்ப் புண்ணசும் பொழுகி நாறித் துன்பநோய் எவற்றி னுக்கும் உறையுளாய்ப் புறந்தோல் மூடும் புன்புலை உடம்பே ஆவி வருத்திடும் பிணிவே றில்லை. 64 | என்பை நரம்பாற் கட்டிக் குடர் நிணம் ஊன் இவற்றை அப்பிப் புல்லிய புழுக்கள் பொதிந்து இரத்தத்தை கொண்ட புண்ணினின்றும் அறாது ஊறி ஒழுகி முடைநாற்றம் வீசித் துன்பத்தைத் தரும் நோய் |