756காஞ்சிப் புராணம்


அந்தகாரி

     வெருவா நிகும்பன் மிசைஒருதாள் ஊன்றி நின்று வெஞ்சூலத்,
தொருகூர்ப் பரம்வைத் தொருகரத்தால் உமையைத் தழுவிக் கைகூப்பி,
அருகே நிற்கும் அந்தகனை நோக்கி அரவச் சிலம்பணிந்து, திருமால்
முதலோர் தொழுதேத்தச் சிறக்கும் இறையோன் திருவுருவம்.      24

     அஞ்சாத நிகும்பன் என்னும் அசுரன் மேலோர் திருவடியை ஊன்றி
நின்று கொடிய சூலத்தை ஓர் முழங்கையை வைத்து மற்றோர் கரத்தால்
உமையம்மையைத் தழுவிக்கொண்டு கைகுவித்து அணித்தாக நிற்கும்
அந்தகா சுரனை அருளொடும் நோக்கிப் பாம்பாகிய சிலம்பைத் திருவடியில்
அணிந்து திருமால் முதலாம் தேவர் போற்றப் பொது நீங்கிப் பொலிவுறும்
அந்தகாரியின் திருவுருவம்,

திரிபுராரி

பொருப்புச் சிலையில் வாசுகிநாண் பூட்டி அரிகோல் வளிஈர்க்கு
நெருப்புக் கூராம் படைதொடுத்துப் பிரம வலவன் நெடுமறைமா
விருப்பிற் செலுத்து நிலத்தேர்மேல் நின்று தெவ்வூர் வெந்தவிய
அருப்புக் குறுவெண் ணகைமுகிழ்த்த அந்த ணாளன் திருவுருவம்.

மேருவை வில்லாகவும், வாசுகியை நாணியாகவும் கொண்டு பூட்டித் திருமாலை
அம்பாகவும், வாயுவை அலகாகவும், அக்கினியை அம்பின் நுதியாகவும் படை
அமைத்துக் கொண்டு பிரமனைத் தேர்ப் பாகனாகவும் வேதங்களைத் தேர்க்
குதிரையாகவும் கொண்டு பூமியாகிய தேர்மிசை நின்று பகைவர் ஊராகிய
முப்புரம் வெந்தழியும்படி அரும்பு தலையுடைய புன்முறுவல் பூத்த
அறவோராகிய திருபுராரி திருவுருவம்.

கங்காதரர்

விசும்பி னின்றும் வெகுண்டார்த்து முழங்கிக் கொதித்து வீழ்தந்த
அசும்பு திரைநீர் வான்யாற்றை அங்கோர் வேணி மயிர் நுதியிற்
பசும்புல் அறுகிற் பனிஉறைபோல் தாங்கி வைகிப் பாவவினை
இசும்பு கடக்கும் பகீரதன்நின் றிரப்ப மகிழ்வான் திருவுருவம்.   26

     பொங்கி முழங்கி வெகுண்டு விண்ணினின்றும் பாய்ந்து வந்த
கங்கையைச் சடையிடை ஓர் உரோமத்தின் நுனியில் பசும்புல்லாகிய
அறுகுநுதியிற் காட்டும் பனித்திவலைபோலத் தாங்கி இருந்து பாவத்தின்
பயனாகும் இழுக்கு நிலமாகிய நரகத்தைக் கடப்பிக்கும் பகீரதன் நின்று
வேண்ட அவனுக்கு அருள் செய்யும் கங்காதரர் திருவுருவம்,