தெய்வ மகளிரை ஒப்பவர் மாளிகையின் மேலிடத்துத் தம் முறுக்காணி கொண்டயாழின் ஒப்பற்ற இசைக்கு உவந்து அங்குற்ற வெள்ளை யானையைப் பாடகமென்னும் அணி சூழ்ந்த தாமரை மலரை ஒக்கும் அடிகளின் நடையால் வருத்தம் உறச் செய்வர். யானையை வென்ற நடை பேசப் பெற்றது. இசைக்குக் கட்டுப்படல்; ‘‘காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி” (கலித். 2- 26,27) பருவரல்-துன்பம்; நுண்ணிய நிலையினின்றும் பருநிலையை அடைவது. இன்பமும் பருநிலையை அனுபவிக்கும்பொழுது அடைவது எனினும் எதிருணர்ச்சியினால் துன்பம் வலுத்துக்காட்டும். காட்டு: ஒரு செயலில் இடைவரும் துன்பத்தை, தடையை ‘இடையூறு’ என்கிறோம். இன்பத்தை அங்ஙனம் கூறாமை உணர்க. பளிக்கு மேல்நிலத் தந்நலார் பணைமுலை ஞெமுங்கக் களிக்கும் ஆடவர் தமைத்தழீஇக் காமப்போர்க் கலவி விளைக்கும் ஆற்றலைக் குரவன்இல் விழைந்தவன் ஒருசார் ஒளித்தி ருந்துகாண் போனெனச் சுருங்கையுள் நுழையும். 81 | பளிங்கால் அமைக்கப் பெற்ற மேல் மாளிகையில் மகளிர் தம் பருத்த கொங்கை அழுந்தக் களிப்புறும் ஆடவரைத் தழீஇக் காமப் போராகிய புணர்ச்சி நுட்பங்களைக் குரு மனைவியாகிய தாரையை விரும்பிய சந்திரன் மறைந்து காண்பவனைப்போலக் கரந்துறையுள் நுழையும். சுருங்கை-தம்மைப் பிறர் அறியாவாறும் பிறர் தம்மைத் தாமறியு மாறும் உள்ள இடம். கள்ளவழி என்பர். ‘‘சித்திரச் சுருங்கை” (சீவ. 142) ஆசிரியரின் மனையை விரும்பும் பெரும்பாதகம் செய்வோன் இதுசெய்வன் என்பது குறிப்பு. மேனி லத்தர மியத்திடைத் துயிலுமெல் லியலார் ஆன னத்தெழில் கவர்ந்துசெல் மதியினை அவர்தங் கான லர்க்குழற் காரளி பின்தொடர்ந் துதைப்ப ஈன முற்றஅத் தழும்புவான் கறையென இலங்கும். 82 | நிலாப்பயன் கொள்ளற்கமைந்த நிலாமுற்றத்துத் துயிலும் மகளிருடைய முகத்தழகைக் கவர்ந்தோடுஞ் சந்திரனை அம்மகளிர் தம் மணங்கமழும் மலருறை கரிய வண்டு பின் சென்று உதைத்தலான் குறைபட்ட அவ்வடுப் பெரிய களங்கமாக விளங்கும். துயில்-துய்+இல்=நுகர்ச்சி இல்லாத நிலை (உறக்கம்). கண் துயில் என்பது துயில் என்றாயது எனின் காட்சி இல்லாத நிலை என்க. உங்கண் மாதரார் முகத்தெழில் நோக்கிஓர் வடிவம் கங்கள் நான்குளான் படைத்ததில் அவயவங் காண்பான் அங்கண் முன்னுற வகுப்புழி அஞ்சனங் குலையப் பங்க முற்றதென் றொழித்ததை மதியெனப் பகர்வார். 83 | |