சிவபுண்ணியப் படலம் 761


ஒன்றும் ஏனைப் பெருந்தேவர் உலகம் அனைத்தும்
                                       அணைந்தணைந்து
மன்ற நெடுநாள் ஆங்காங்குப் போகம் நுகர்ந்து வைகியபின்.   40

     விமான வழியாகச் சென்று சேர்ந்து சிவலோகத்திற் பரபோகத்தைப்
பெரிதும் நுகர்ந்து பின்னர்த் திருமால், பிரமன், இந்திரன், சிறப்புறும் ஏனைய
பெரிய தேவர் பதங்கள் அமைந்த உலகங்களை அடுத்தடுத்து நிச்சயமாக
நெடுங்காலம் போகம் நுகர்ந்து இருந்த பின்பு,

முந்நீர் வரைப்பின் அவதரித்து ஞால முழுதும் ஒருகுடைக்கீழ்ப்
பன்னாள் ஆண்டு மறுவலுஞ்சீர் பரவுங் காஞ்சித் திருநகரிற்
பொன்னார் வேணி ஏகம்பப் புத்தேள் அடிக்கீழ் வழிபட்டு
மின்னோர் பாகன் திருவருளான் மீளா வீட்டின் நிலைபெறுவார்.  41

     கடல் சூழ்ந்த உலகிற் பிறந்து உலக முற்றவும் பொது நீக்கித் தனக்கே
உரிமையாக்கி ஆண்டு மீண்டும் சிறப்புப் பரவும் காஞ்சிமா நகரில்
பொன்போலும் சடை மவுலித் திருவேகம்பர் அடியிணைகளை வழிபாடு
செய்து திருவருள் பெற்று மீண்டும் பிறப்பில் வாராத முத்தியைத்
தலைப்படுவர்.

மற்றைய பதிட்டைப் பயன்

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     ஓங்குயர் விழுச்சீர்க் கம்பனார் கோயி லுள்ளுற நந்திஎம்
பிரானை, ஆங்கவர் திருமுன் வெள்ளியங் கயிலை அமர்ந்தெனத்
தருமவெள் விடையை, வாங்குவில் வரையார் வாய்தலின் இருபால்
வாயில்காப் பாளரை அமைப்போர், தேங்கிய செல்வச் சிவபுரி
அணுகித் திருநலந் திளைத்துவீ டடைவார்.                   42

     ஓங்கி உயர்ந்த மிக்க சிறப்பினையுடைய திருவேகம்பர் ஆலயத்துள்
நந்தி எம்பெருமானைச், சந்நிதியில் வெள்ளிக் குன்றனைய தரும
தேவதையாகிய வெள்ளிய ஏற்றினை மேருமலையை வில்லாக வளைத்தவர்
தம் வாயில் காவலரைத் தாபித்தோர் வீங்கிய செல்வச் சிவலோகத்தை
அணுகித் தூய போகம் நுகர்ந்து வீட்டினையுறுவார்.

     அங்குச பாசம் வரதமோ டபயம் நாற்கரத் தமைவரக்
கலைமான், பங்கயக் கிழத்தி பாங்கியர் சூழப் பத்திர பீடமேல்
வைகும், எங்கள்நா யகிதன் திருவுருப் பிறவும் இயற்றிவண்
காஞ்சியின் அமைப்போர், தங்கிளை குளிர்ப்ப நெடிதுநாள்
வாழ்ந்து கடைமுறை தாளிணை சேர்வார்.                     43

     அங்குசம், பாசம், அபயம், வரதம் பொருந்திய நான்கு கரங்கள்
அமைந்து சரசுவதியும் திருமகளும் ஆகிய சேடியர் மருங்கிருக்கப்