ஒலியையுடைய கடலை அறிவுறுத்தவும், அக்கடலிடை எழும் செறிந்த நுரையை ஒத்து விளக்கமுடைய குடைகள் நெருங்கவும், அன்ன மாக்கடல் தோன்றிய ஆரமிழ் தென்ன மாதர் மிடற்றிசைப் பாடலும் நன்னர் மங்கல நாதமும் வேதமும் மன்னும் அன்பர்கள் பாட்டும் மலிந்தெழ. 78 | அக்கடலிடைப் பிறந்த அரிய அமிழ்தத்தை ஒப்ப மகளிர் கண்டப் பாடலொலியும், சுபச்சோபன ஒலியும், வேத ஒலியும் மெய்யன்பர் தோத்திர ஒலியும் மல்கி எழவும், இமய மாதிய ஈகையங் குன்றெலாந் தமதி ருங்குடித் தையல்நல் லாளொடும் விமலர் கொள்ளும் விழாவணி காணவந் தமைவு கொண்டெனத் தேர்கள் அலங்குற. 79 | இமயம் முதலிய பொன்மலைகள் யாவும் தம்குடியிற் றோன்றிய மலைமகளாருடன் பெருமானார் கொள்ளும் திருவிழாவைச் சேவிக்க வந்து சேர்ந்தாலெனத் தேர்கள் விளங்கவும், பொன்னங் கிண்கிணி பூஞ்சிலம் பின்னொலி மின்னு மேகலை ஆர்ப்பொலி மிக்குற அன்ன மன்ன அணங்கனை யார்குழாந் துன்னி எங்கணும் ஆடல் தொடங்கிட. 80 | பொன்னாலமைந்த கிண்கிணி, சிலம்பு, மேகலை இவற்றின் ஆரவார ஒலி மிக்கெழ அன்னம்போலும் நடையினையும் தேவ மகளிர் போலும் வடிவினையும் உடைய மங்கையராயம் நெருங்கி யாண்டும் ஆடல் தொடங்கவும், சிகர மாளிகைத் தெற்றி தொறும்பயில் மகர தோரணப் பன்னிற மாமணி துகளில் பேரொளி துன்றிய வீதியும் புகரில் சித்திரந் தீட்டிய போலுற. 81 | சிகரங்களையும் மேடைகளையும் உடைய வீடுகள் தோறும் தூக்கிய மகர மச்ச வடிவில் அமைந்து பல நிறங்களையுடைய மணிகள் பதித்த தோரணங்களின் குற்றமற்ற பேரொளி செறிந்த வீதிகளும் குற்றமற்ற சித்திரங்கள் தீட்டப்பெற்றுள்ளனபோலக் காட்சி அளிப்பவும், |