| 		| கண்டிகை நீறு தாங்கிக் காலையும் மாலைப் போதும் அண்டர்கோன் அடிகள் போற்றி அடியவர் பூசை யாற்றித்
 தொண்டினால் அங்கண் வைகுந் தூயவர் தமக்கே கம்பத்
 தொண்டொடி பாகன் எங்கோன் கருணைகூர்ந் துதவும் முத்தி.   98
 |       உருத்திராக்க வடமும், விபூதியும் அணிந்து காலை மாலையாகிய    இருபொழுதும் தேவர்பெருமானார் திருவடிகளைத் தொழுது மெய்யன்பர்
 பூசனையைப் புரிந்து திருத்தொண்டொடும் அங்கு வாழும் தூயவர்க்கு
 ஒள்ளிய தொடியை அணிந்த உமையம்மையார் தலைவனார் அருள்கூர்ந்து
 முத்தியை வழங்குவர்.
 		| பற்பல பேசி என்னே பருவரு நிரயத் துன்புந் துற்றபல் யோனி தோறுஞ் சுழன்றுழல் பிறவி நோயும்
 உற்றிடும் ஆண்டாண் டெய்தும் உறுதயர் பலவும் நோக்கி
 மற்றிவை யொழிதல் வேட்டோர் காஞ்சியின் வதிதல் வேண்டும்.  99
 |       பலப் பல கூறிப் பயன் என்னை? நரகத் துன்பமும், செறிந்த பல்வகை    யோனிகளினும் புக்குழலும் பிறவித் துன்பமும் அவ்வவ் வுலகங்களின்
 வாழ்க்கைத் துன்பமும் நோக்கி இவற்றை நீக்க விரும்பியவர் காஞ்சியில்
 உறைக.
 காஞ்சியே கலியில்வசித்தற் கிடமெனல்	 கலி விருத்தம்	 		| காமருஞ் சிவிகைகள் காவி யாயினுந் தோமுறு பிறர்சுமை சுமந்திட் டாயினுஞ்
 சாமிஎன் றிழிஞர்தம் பணிசெய் தாயினும்
 மாமதிற் காஞ்சியின் வதிதல் வேண்டுமால்.       100
 |       அழகிய பல்லக்குக்களைச் சுமந்தாயினும், குற்றமிகும் கீழ்மக்களுடைய    சுமையைச் சுமந்தாயினும், இழிஞரைத் தலைவரே எனப்போற்றி அவர்தம்
 ஏவல் செய்தாயினும் கூலிபெற்றுப் பெருமதில் சூழ்ந்த காஞ்சியில்
 வைகுதலை விரும்புக.
 		| கழுதைமேய்த் தாயினும் மற்றுங் காழ்படும் இழிதொழில் இயற்றியும் இரந்துண் டாயினும்
 ஒழிவறு பத்தியின் உறுதி யாளராய்
 வழுவறு காஞ்சியின் வதிதல் வேண்டுமால்.       101
 |       கழுதையை மேய்ப்பார் ஒருவரும் இலர் ஆகவும் அதனைச்    செய்தாயினும், குற்றமுடைய இழிதொழில் யாதும் செய்தும், இரந்துண்டாயினும்
 நீங்காத பேரன்பினால் உறுதிப்பாடுடையராய்க் குற்றமற்ற காஞ்சி மாநகரில்
 வைகுதல் செய்ய வேண்டுவது.
 |