தாபதப் பிருகுமெய்த் ததீசி கௌதமன் சாபமன் றியுங்கலி தோடத் தான்மிகத் தேய்பொருட் பாஞ்சராத் திரம்ப வுத்தமாம் பாபநூல் உறுதியே பனவர்க் குண்டரோ. 106 | மெய்த் தவமுடைய பிருகுமுனிவரும் ததீசி முனிவரும், கௌதம முனிவரும் இட்ட சாபமே அன்றியும் கலியுகத்தின் தோஷத்தானும், மிகத் தேய்ந்த பொருள்களைக் கூறும் பாஞ்சராத்திரமும், மாயாவாதமும் ஆகும் பாப நூல்களைப் பிரமாணமாக் கோடலே பார்ப்பனர்க்குத் தோன்றும், யாதுகொல் கலியதன் இயல்பும் அங்கதற் கேதமும் அதன்மிறை காஞ்சிக் கின்மையும் ஓதுதி விரித்தெமக் கெனஉ ரைத்தலுஞ் சூதமா முனிமுனி வரர்க்குச் சொல்லினான். 107 | கலி என்பது யாது? அதன் குணவிசேடம் யாது? அதன் துன்பவிளைவும், அதன் கொடிய ஆட்சியும் காஞ்சித்தலத்தில் அக்கலியின் கொடுமை தலையெடாமையும் விரித் தெமக் குரைத்தருள வேண்டும் என வினவிய முனிவரர்க்குச் சூதபுராணிகர் விடைகூறத் தொடங்கினர். யுகங்கள் வரம்பெறல் கலிநிலைத் துறை சகமெ லாம்மலை மாதொடுந் தன்னகத் தொடுக்கிப் பகல்இ ராஉள திலதெனும் பகுப்பில் அக் காலைப் புகழ்ப டைத்ததான் ஒருவனே வைகிமுன் போல அகில லோகமும் படைத்திடக் கருணைசெய் தருளி. 108 | எல்லா வுலகங்களையும் உமையம்மையா ரொடும் தன்னுள் ஒடுக்கிப் பகற்போதும் இராப்போதும் உளதென்றும் இலதென்றும் பகுத்துக் கூறவொண்ணாத அச்சங்கார காலத்தில் என்று முள்ள செம்பொருள் எனப்பெறும் புகழ்படைத்த பிரானாரே தனித்து வைகிமுன்போல அகில உலகங்களையும் தோற்றுவிக்கத் திருவுள்ளங்கொண்டு. அறிவும் இச்சையும் செய்கையும் அடைவுறத் தோற்றி வெறிம லர்த்தவி சிருக்கைவே தியனைமுன் படைத்து மறைகள் ஈந்துபின் மாயனை உம்பரை உலகை முறையின் ஈன்றளித் தருளினன் முக்கண்எம் பெருமான். 109 | ஞானசத்தி இச்சாசத்தி கிரியாசத்தி என்னும் முச்சத்திகளை முறையே தோற்றுவித்து நறுமணங் கமழும் தாமரை மலரி லுறையும் பிரமனை முன்னர்ப் படைத்து வேதங்களை அவனுக்குத் தந்து பின்னர்த் |