சித்தசன் போற்றி உலகெலாங் காமம் செறித்திடும் இறைமை பூண்டதுவும், அத்தனார் ஏவலாற்றினால் அணைந்த அகிலதீர்த்தங்களும் வணங்கிப், பைத்தபாப் பல்குல் பாகனார் தம்பாற் பற்பல வரங்கள்பெற் றதுவும், தத்துநீர்க் கிறைவன் அருச்சனை யாற்றித் தங்கும் அப் பதம்பெறு மாறும். 19 மன்மதன் பூசித்து உயிர்களுக்கெல்லாம் காமத்தைத் தோற்றுவிக்கும் அரசுரிமை தாங்கியதும்; இறைவன் கட்டளையினால் இங்குற்ற சருவதீர்த்தங்களும் வணங்கி மங்கை பங்கனாரிடத்துப் பற்பல வரங்கள் பெற்றதும்; வருணன் அருச்சித்து நீர்க்கிறைவன் என்னும் பதவியை எய்தியதும்; சித்தசன்-திருமாலின் சித்தத்துள் தோன்றினோன் காசிவாழ் விசுவ நாதனுங் காஞ்சிப் பெட்பினால் அணைந்துவைகியதும், பூசனை உஞற்றிக் காற்றினான் கந்த வாகனாப் பொலிவுறுமாறும், மாசறு கோள்கள் ஒன்பதும் வழுத்தி எண்ணிய வரம்பெறுமாறுந், தேசுறு வாம தேவநன் முனிவன் தொழுதுவெம் பிறவிதீர்ந் ததுவும். 20 காசியில் எழுந்தருளியுள்ள விசுவநாதப் பெருமானும் விருப்போடும் காஞ்சியில் எழுந்தருளியதும்; வாயுதேவன் பூசனை செய்து வாசனையைச் சுமந்து செல்பவன் ஆகப் பொலி வெய்தியதும்; மாசிலாத நவக்கிரகங்களும் துதித்துக் கருதிய வரங்களைக் கொண்டதும்; புகழ்மிகு வாமதேவ முனிவர் தொழுது கொடிய பிறவி தவிர்ந்ததும்; அகனுறப் பரசி மார்க்கண்டி முதலோர் இறப்பினைக் கடந்ததும் அயன்மால், இகலுறு செருக்கின் வருவினை தணப்ப இலிங்கம்அங் கருச்சித்த வாறுஞ், சகமெலாம் இறுத்து முக்கண்எம் பெருமான் தங்குவீ ராட்டகா சத்தின், முகில்நிறப் புத்தேள் பூசனை உஞற்றித் துகிர்நிறம் பெற்றிடும் முறையும். 21 மார்க்கண்டேயர் முதலானோர் இறைவனை உள்ளன்பொடும் வணங்கி இறவாமை எய்தியதும்; மால் பிரமர் இருவரும் தம்முட்பகைத் தெழுந்த செருக்கினால் வந்த பாவம் தீரச் சிவலிங்க அருச்சனை புரிந்ததும்; உலகெலாம் ஒடுக்கிவீற்றிருக்கும் வீராட்டகாசப்பெருமானை வணங்கி திருமால் மேக நிறம் நீங்கப் பெற்றுப் பவளவண்ணம் படைத்ததும்; மாண்டகு காமக் கண்ணியை வணங்கி மலர்மகள் சாபம்மாற்றியதும், பாண்டவர் முதலோர் தொழுதுநல் வரங்கள் பரித்ததும் வணங்கிஈ சான, ஆண்டகை ஆசைக் கிறைமைஎய் தியதும் அச்சுதன் மச்சமாய்ப் போற்றி, வேண்டலர்ச் செகுத்து வேதநூல் கொணர்ந்து வேதியர் தமக்களித் ததுவும். 22 திருமகள் மாட்சிமை பொருந்திய காமாட்சி யம்மையை வணங்கிச் சாபம் நீங்கியதும்; பாண்டவர் முதலானோர் தொழுது நற்பேறுகள் பெற் |