26மேருமந்தர புராணம்  


 

வைசயந்தன் சமவசரணம் சேர்தல்.

வேறு.

 56. மதிதலைப் பட்ட போழ்தின் மகிழ்ந்துவை சயந்த னென்றே
    நிதியறை திறந்து வீசி நீதியாற் செல்லு நாளுட்
    டுதைமல ரசோக மென்னும் வனத்திடைச் சுயம்பு நாமத்
    ததிசய மடையக் கண்டா ரரசனுக் கறிவித் திட்டார்.

     (இ-ள்)   மதி   -   சந்திரன்,    தலைப்பட்ட   போழ்தின் -
சம்பூர்ணத்தை   யடைந்த  காலத்தில்   (சமுத்திரம்  மகிழ்வதுபோல),
மகிழ்ந்து   -   (அரசன்)    சந்தோஷமடைந்து,   (அப்புதல்வனுக்கு)
வைசயந்தனென்று   -   வைசயந்தனென்று   பெயரிட்டு,  நிதியறை -
பாண்டாகாரத்தை,    திறந்து    -    திறந்துவிட்டு,  வீசி  -  யாசக
ஜனங்களுக்குப்   பொன்னை   யெடுத்துச்  சிதறித்  தானங்கொடுத்து,
நீதியால் - கிரமத்தால், செல்லுநாளுள் - நடக்கின்ற காலத்தில்,  துதை
-  நெருங்கிய,   மலர்   -   பூக்களையுடைய,   அசோகமென்னும் -
அசோகமென்கிற,  வனத்திடை - உத்தியானத்தில்,  சுயம்பு நாமத்து -
ஸ்வயம்பு நாமதீர்த்தங்கரருடைய, அதிசயம் - 1சமவசரணம்,  அடைய
-  வந்துசேர,   கண்டார் - பார்த்த  வனபாலகர்கள்,   அரசனுக்கு -
ராஜாவுக்கு,  அறிவித்திட்டார் - அவ்விசேஷத்தைத்  தெரிவித்தார்கள்,
எ-று.                                                  (56)

 57. விழுநிதி யெளிதிற் பெற்ற வறியவன் போல வேந்த
    னெழுதரு விசோதி தன்னா லெழுந்துசென் றிறைஞ்சி வாழ்த்தி
    முழுதுட னவர்கட் கீந்து முனிவர்தங் கோன் சிறப்புக்
    கெழுகென வீதிதோறு மியம்பின முரச நின்றே.

     (இ-ள்)  விழுநிதி - பெரிதாகிய நிதியை,  எளிதில் - சுலபமாக,
பெற்ற - அடைந்த,  வறியவன்போல - ஏழையைப்போல, வேந்தன் -
வைசயந்த மஹாராஜன்,  எழுதரு - உண்டாகிய, விசோதி தன்னால் -
விசுத்த பரிணாமத்தால்,  எழுந்து - ஆசனத்தைவிட்டு  எழுந்திருந்து,
சென்று -  2ஏழடி  நடந்து,   இறைஞ்சி  -  வணங்கி,   வாழ்த்தி -
ஸ்தோத்திரம்பண்ணி, உடன் - உடனே, முழுதும் - (தானணிந்திருந்த
ஆபரணம்) முழுமையும்,  அவர்கட்கு  -  அவ்வன  பாலகர்களுக்கு.
ஈந்து - கொடுத்து,   முனிவர்தங்கோன் - முனீஸ்வரர்களுக்கெல்லாம்
எஜமானாகிய  ஸர்வக்கியனது,  சிறப்புக்கு - பூஜைக்கு,  எழுகென -
எல்லோரும்  செல்லக்கடவீராக  என்று கட்டளையிட, வீதிதோறும் -
வீதிகள்தோறும்,  முரசம்  -  பேரிகைகள்,  நின்று  -  நிலைபெற்று,
இயம்பின - அவ்விஷயத்தைக்கூறி முழங்கின, எ-று.           (57)

___________________________________________

1சமவசரணம் - தேவர்களால் நிர்மிக்கப்பட்ட கோயில்.
2ஏழடி நடத்தல் - சப்த பரிவர்த்தனையைத் தாண்டுதலுக் கறிகுறியாம்.