வைசயந்தன் முத்திச்சருக்கம் 3


 

கடந்த - தாண்டப்பட்ட,  கவி - சாஸ்திரமாகிற, மா - பெரிய, கடலின்
- சமுத்திரத்தினது, நிலை - ஆழம் அல்லது அளவு, யாதும் - சற்றும்,
எண்ணாது   -  (இவ்வளவென்று)   நினையாமல்,   இது  -  இந்தச்
சாஸ்திரமாகிற  சமுத்திரத்தை,   நீந்துதற்கு  -  நீந்திக்  கடப்பதற்கு,
எழுந்தேன் - உத்தேசித்து முன் வந்தேன், எ-று. (எனவே நூலாசிரியர்
நூதனதபசி  என்பதும்,  துணிவால்  இது  சொல்லலுற்றன  ரென்பதும்
விளக்கமாயின.)                                          (3)

 4. நல்லோர்கள் போய வழிநாலடிப் போயினாலும்
   பொல்லாங்கு நீங்கிப் புகழாய்ப்புண் ணியமு மாகுஞ்
   சொல்லா னிறைந்த சுதகேவலி சென்ற மார்க்கஞ்
   சொல்வா னெழுந்தேற் கொருதீமையுண் டாக வற்றோ.

     (இ-ள்.) நல்லோர்கள் - நற்குணமுள்ள பெரியோர்கள், போய -
சென்ற,  வழி - நன்மார்க்கத்தில்,  நாலடி - நாலடிதூரம்  (அதாவது :
சிறிதாகிலும்), போயினாலும் - சென்றாலும், பொல்லாங்கு - கெடுதிகள்
(அதாவது : பாவங்கள்).  நீங்கி  -  விலகி,  புகழாய்  -  கீர்த்தியாகி,
புண்ணியமும்   -   ஆகும்   -   உண்டாகும்,  சொல்லால்  -  நல்
வசனத்தினால்,   நிறைந்த   -   நிறைந்திரா   நின்ற,   சுதகேவலி -
சுருதகேவலிகளாகிய (மேருமந்தரர்களால்),  சென்ற  -  செல்லப்பட்ட,
மார்க்கம்  -  நெறியாகிய சரிதையை,  சொல்வான்  -  சொல்லுதற்கு,
எழுந்தேற்கு  -  ஆரம்பித்த   எனக்கு,   ஒருதீமை   -   யாதொரு
விக்கினமும்,  உண்டாகவற்றோ   -   உண்டாகுமோ,   (உண்டாகாது
என்றபடி),  எ-று.                                         (4)

 5. பொன்னைப் பொதிந்த கிழிபொன்னோ டிருந்த போழ்திற்
   பொன்னைப் பொதிந்த கிழிதன்னையும் பொன்னின் வைப்பர்
   புன்மைச்சொல் லேனும் புராணப்பொரு ளைப்பொ திந்தால்
   நன்மைக்கண் வைத்தற் கினிநாமிரங் கும்ப டித்தோ.

     (இ-ள்.) பொன்னை - சுவர்ணத்தை, பொதிந்த - முடிந்த, கிழி -
துணி,  பொன்னோடு - ஸ்வர்ணத்தோடு,  இருந்தபோழ்தில் - இருந்த
காலத்தில்,   பொன்னை  -  ஸ்வர்ணத்தை,   பொதிந்த  -  முடிந்த,
கிழிதன்னையும்     -     அத்துணியையும்,     பொன்னின்     -
ஸ்வர்ணத்தைப்போலவே,  வைப்பர்  -  பாதுகாப்பில்  வைப்பார்கள்;
(அதுபோல்)  புன்மைச்சொல்லேனும் - (நூலாசிரியனாகிய எனதுசொல்)
அற்பவசனமானாலும்,    புராணப்பொருளை   -   (உயர்ந்தோர்களது)
புராணமாகிற      பொருளை      (சரிதத்தை),    பொதிந்தால்   -
சேர்த்துச்சொன்னால்,   நன்மைக்கண்   வைத்தற்கு  -  நன்மையாகக்
கொள்வதற்கு, நாம்  - ,இரங்கும்படித்தோ  -  வருந்தவேண்டியதோ?
(வேண்டியதில்லை என்றபடி),  எ-று.                         (5)