370மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

இந்த    பஞ்சபாவத்தின்   விவரங்களைத்  தத்துவார்த்த  சூத்ரடீகா
ஸுஹபோதையில் இரண்டாவது அத்தியாத்தில் கண்டு கொள்க. (42)

 791. வினையெட்டி னுதயத் தாகும் விகாரங்கள் விபாகமென்று
     மனம்வைத்து முனிவன் செல்ல வச்சிரா யுதனும் போகந்
     தனைவிட்ட மனத்த னாகிச் சதங்கைச்சீ றடியிற் செல்லு
     மனமொக்கு மிரத மாலை யார்வத்தி னரிதிற் போந்தான்.

   (இ-ள்.)  வினையெட்டின்  - அஷ்ட  கருமங்களின், உதயத்து -
உதயத்தினால்,  ஆகும்  -  உண்டாகின்ற,  விகாரங்கள் -  விகாரச்
செயல்கள்,   விபாகமென்று - கர்மானுபாகமென்று,  மனம் வைத்து -
மனதிற்றியானித்து, முனிவன் - சக்ராயுதமுனிவன், செல்ல - தவத்தின்
மார்க்கத்தில்    செல்கையில்,    வச்சிராயுதனும்   -    வச்சிராயுத
மஹாராஜனும்,  போகந்தனை - ஸம்ஸாரபோகத்தை, விட்ட - நீக்கிய,
மனத்தனாகி -  மனதை  யுடையவனாகி, சதங்கை - சதங்கையணிந்த,
சீறடியில் - சிற்றடியால், செல்லும் - செல்கின்ற, மனமொக்கும் - தன்
மனதுக்கொத்த, இரதமாலை - இரத்தினமாலையினுடைய, ஆர்வத்தின்
- ராகத்தினின்றும், அரிதில் -  அருமையாக,  போந்தான்  - விலகிச்
சென்றான், எ-று. (43)

 792. போகித்த போகந் தானே புதியவை யாகித் தோன்றி
     மோகத்தைப் பெருக்க லல்லான் முடிவெய்தாச் செல்வ மாயும்
     மேகத்தின் மின்னின் வீயு மிவற்றைநா முன்னம் நீங்கி
     நாகத்தை வீட்டை நல்கு நற்றவம் புரிது மென்றான்.

    (இ-ள்.) (அவ்வாறு  அவ்வாசையை விட்ட அவன்), போகித்த -
முன்  அனுபவித்த,   போகந்தான்  - போகோப போகங்களானவை,
புதியவையாகித்   தோன்றி   -   நூதனமானவைகளாகத்   தோற்றி,
மோகத்தை - அஞ்ஞானத்தாலாகும்  மயக்கத்தை, பெருக்கலல்லால் -
விருத்தியாக்குவதேயல்லாமல்,   முடிவு    -   முடிவை,   எய்தா -
அடையமாட்டா, செல்வம் - ஸம்பத்தும், ஆயும் - ஆயுஷ்ய கர்மமும்,
மேகத்தின்    -      மேகத்தைப்போலவும்,       மின்னின்    -
மின்னலைப்போலவும், வீயும் -  நாசமெய்தும், (ஆகையால்), இவற்றை
- இவைகளை,  நாம் -  அறிவுடைய  நாம்,  முன்னம் - அவைகள்
நீங்குவதன்   முன்னமே,   நீங்கி  -   விட்டு  விலகி,  நாகத்தை -
தேவலோகத்தையும்,   வீட்டை   -   மோட்சத்தையும்,    நல்கும் -
கொடுக்கும்படியான,  நற்றவம் -  நன்மையாகிய  தபத்தை, புரிதும் -
செய்வோம், என்றான் - என்று பாவனை செய்தான், எ-று. (44)

 793. இரதனா யுதனைக் கூவி முடியினை யீந்து வேந்தன்
     விரமனா மனத்த னாகி வேட்கையின் வீழ்ந்து போகி