4மேருமந்தர புராணம்  


 

நூல்.

 6. மணிமுடி கவித்து வேந்தன் மன்னவர் தன்னைச் சூழ
   வணியினோ டிருந்த வேபோ லயங்கியங் கடலுந் தீவுந்
   தணிவில்சூழ் மேரு வென்னுந் தடமுடி கவித்துச் சம்பூ
   வணியினோ டிருந்த தீபத் தரசன தகலத் தம்பொன்.

     (இ-ள்.)  மணிமுடி - அழகியகிரீடத்தை,   கவித்து - அணிந்து,
வேந்தன்  -  சக்ரவர்த்தியானவன்,   மன்னவர் - அநேக  அரசர்கள்,
தன்னைச்சூழ  -  தன்னைப்படை   சூழ்ந்திருப்ப,  அணியினோடு  -
அழகோடு,   இருந்தவே  போல்  -  (மத்தியில்)  இருந்ததைப்போல,
அயங்கியம்   -   அசங்கியாதமாகிய    (அதாவது   கணக்கில்லாத),
கடலுந்தீவும்  -  சமுத்திரமும்  தீபமும்,  சூழ் - சூழ்ந்த,  தணிவில் -
குறைவில்லாத,  மேருவென்னும்  -  மஹாமேருவென்னும்,  தடமுடி -
பெரிதான   மகுடத்தை,   கவித்து  -  அணிந்து,   அணியினோடு -
அழகுடன்,  இருந்த - மத்தியில்  இராநின்ற,  சம்பூ - ஜம்பூவென்னும்
பெயரையுடைய,  தீபத்தரசனது - த்வீபராஜனது,  அகலத்து - மார்பில்
(அதாவது மத்தியில்), அம்பொன் - அழகிய, எ-று.              (6)

          (இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்)

 7. திருவெனத் திகழ்ந்து செம்பொன் மலையினைச் சேர்ந்து தீர்த்த
   மருவியே செல்லுங் கந்த மாலினி யென்னு நாடு
   விரவிலா விதேகர்க் கென்று முறையுளாய் விதேக நாமம்
   மருவிய நாட்டுச் சீதோ தகைவட தடத்தி லுண்டே.

     (இ-ள்.)   திருவென   -   இலக்குமியைப்போல,  திகழ்ந்து -
பிரகாசித்து,  செம்பொன்  மலையினை - சிவந்த  பொன் மலையாகிய
மகம்மேரு  பர்வதத்தை,  சேர்ந்து  -  சார்ந்து,   தீர்த்தம்  -  தரும
தீர்த்தமானது, மருவியே  -  (எக்காலமும் நீங்குதலில்லாமல்) சேர்ந்தே,
செல்லும் - செல்லுகின்ற,  கந்தமாலினியென்னும் - கந்தமாலினியென்று
சொல்லும் பெயரையுடைய, நாடு - தேசமானது, விரவு - (சம்சாரத்தில்)
கலத்தல்,  இலா  -  இல்லாத  (வைராக்கியத்தால்  தபசைச் சேர்ந்த),
விதேகர்க்கு  -  தேகத்தை  நீக்கி  முக்தி  யடைபவர்க்கு, என்றும் -
எப்பொழுதும், உறையுளாய் - வாசஸ்தலமாகி,  (அதனால்) விதேகம் -
விதேகமென்கிற, நாமம் - பெயரை, மருவிய - சேர்ந்திராநின்ற, நாட்டு
- விதேக   க்ஷேத்திரத்து,   சீதோதகை   -   சீதோதாநதியினுடைய,
வடதடத்தில் - வடகரையில், உண்டு - இரா - நின்றது, எ-று.     (7)

நாட்டுச்சிறப்பு

 8. ஐஞ்சிறப் பயருந் தேவர் நால்வகைக் குழுவோ டம்பொ
   னிஞ்சிசூழ்ந் திலங்கு மேழு நிலத்திறை யிருக்கை வட்ட