வைசயந்தன் முத்திச்சருக்கம் 41


Meru Mandirapuranam
 

 86. ஊறிரண்டாகி நாற்றம் வண்ணமுஞ் சுவையு மொன்றாய்க்
   கூறிரண் டாக்க லாகா நுண்மைத்தா யளவைக் கெல்லாம்
   பேறுதன் வழிய தாகிப் பிறங்கிமூ வுலக முற்று
   மாறுகந் தங்கட் காதி யாகிய தணுவ தாமே.

     (இ-ள்.) அணுவது - (ஸ்நிக்தபரமாணு,  ரூக்ஷபரமாணு  என்னும்
இரு   வகையான)  அணுவானது,    ஊறு -  அஷ்டஸ்பரிசங்களுள்,
இரண்டாகி -(ஸ்நிக்தபரமாணுவுக்கு ஸ்நிக்த ஸ்பரிசமும் சீதஸ்பரிசமும்,
ரூக்ஷபரமாணுவுக்கு      ரூக்ஷஸ்பரிசமும்      உஷ்ணஸ்பரிசமுமாக)
இரண்டிரண்டு ஸ்பரிசங்களை யுடையதாகி,  (என்றதனால்  மற்ற  குரு
லகு    மிருது     கர்க்கச     மென்னும்    நாலு  ஸ்பரிசங்களும்
ஸ்கந்தங்களிடத்தினுள், அணுவுக்கில்லை என்பது பெறப்படும்), நாற்றம்
- சுகந்தம்  துர்க்கந்தங்களிலும்,  வண்ணம் -   பஞ்சவர்ணங்களிலும்,
சுவையும் - ஷட்ரஸங்களிலும், ஒன்றாய் - ஒவ்வொன்றை யுடையதாகி
(அதாவது   ஒருகந்தம்   ஒருரஸம்   ஒரு   வர்ணத்தையுடையதாகி),
கூறிரண்டாக்கலாகா -    கேவலஞானத்துக்கும்   இரண்டுகூறுபடுத்த
முடியாத,  நுண்மைத்தாய்  -  ஸூக்ஷ்மமாகி,  அளவைக்கெல்லாம் -
(த்ரவிய,  க்ஷேத்ர,  கால,  பாவ)  அளவைகளுக்கெல்லாம்,  பேறு -
பெறற்பாடு,   தன்   வழியதாகி  -  தனது  வழியாலாகி, மூவுலகம் -
மூன்றுலோகத்தில்,  முற்றும்  -  முழுமையும்,  பிறங்கி  -  நிறைந்து,
ஆறுகந்தங்கட்கு -  முன்சொன்ன ஆறு ஸ்கந்தங்கட்கும், ஆதியாகிய
தாம் - முதலாயிராநின்றதாம், எ-று.                         (86)

 

 87. கருமநல் லுபசயங் காய நோகமம்
    மருவிய புலம்வத்து போகங் காரண
    மிருள்வெயி லொளியொலி நிழனாற் பூதமாய்த்
    திரிவுடைப் புற்கலந் தான சீவனே.

     (இ-ள்.) கருமம் -  ஞானாவரணாதி கருமங்களும், நல்லுபசயம்
-  நன்றாகிய   தாது   உபதாதுக்களும்,   காயம்   -  ஒளதாரிகாதி
பஞ்சசரீரங்களும்,  நோகமம் - நோகர் மவர்க்கணைகளும், மருவிய -
சேர்ந்திராநின்ற,    புலம்   -   பஞ்ச   இந்திரியங்களும்,  வத்து -
இந்திரியவிஷய   வஸ்துக்களும்,   போகம்   -   போக  உபபோக
வஸ்துக்களும்,  காரணம்  -  (தர்ம,  அர்த்த,  காமத்துக்குக்) காரண
வஸ்துக்களும்,  இருள்  -  இருட்டும்,  வெயில் - வெயிலும், ஒளி -
பிரகாசமும்,  ஒலி  -  சப்தமும்,  நிழல்  -  நிழலும்,  நாற்பூதமாய் -
(பிருத்திவி,  அப்பு,  தேயு,  வாயு)  என்னும் நான்கு  பூதங்களுமாய்,
திரிவுடை - (திரவிய, குண, கிரியா) விகாரங்களையுடைய,புற்கலந்தான்
-   புத்கலங்கள்,   அசீவன்   -   அஜீவனாகும்,    ( என்றதனால்
ஜீவகுணமிதற்கில்லை என்பது பெறப்பட்டது) எ-று.