128மேருமந்தர புராணம்  


 

 277. முன்புபின் பொன்றுந் தம்மின் மலைவிலா மூர்த்தி நூல்போற்
     பின்புமுன் பொன்ற வென்று முரைக்கின்றான் றன்னைப் பித்த
     னென்பதொன் றன்றென் றெண்ணி யவனைத்தா னழைத்து ராமை
     முன்புநின் றுருவக் கேட்டுப் போயின்ன முறையி டென்றாள்.

     (இ-ள்.)  முன்பு  - முன்னுக்கு,  பின்பு  -  பிற்பாடு, ஒன்றும் -
யாதொன்றும்,  தம்மின்  -  தமக்குள், மலைவிலா -  மாறுபாடில்லாத
(அதாவது :   பூர்வாபர   விரோதமில்லாத),  மூர்த்திநூல்   போல் -
ஸர்வஜ்ஞனால்    சொல்லப்பட்ட    பரமாகமம்போல,    என்றும் -
எப்பொழுதும்,   பின்பு   முன்பொன்ற   -   பின்னதும்  முன்னதும்
வித்தியாசமடையாமல்      ஒத்துவர,      உரைக்கின்றான்றன்னை -
சொல்லுகின்ற  இவனை,   பித்தனென்பது  -  பைத்தியக்காரனென்று
சொல்வது,  ஒன்று  -  ஒரு  காரியம்,  அன்றென்று - அல்லவென்று,
எண்ணி  -  யோசித்து,  ராமை - இராமதத்தையானவள்,  அவனை -
அவ்வணிகனை, அழைத்து  -  கூப்பிட்டு,  முன்பு  நின்று  - எதிரில்
நின்று,  உருவக்கேட்டு   -  அவனுடைய  விருத்தாந்தம்  முழுவதும்
மனத்திற்  பதியக்கேட்டு, போய் -  நீ  போய்,  இன்னம்  இன்னமும்,
முறையிடு  -  இப்படியே சொல்லி  முறையிடுவாய், என்றாள் - என்று
அவனிடம் சொன்னாள், எ-று.

     தான் - அசை.                                     (54)

வேறு.

 278. வாளார் தடந்தோண் மன்னர் மன்னர்தஞ் செய்கைவன்போர்
     தோளால் விலக்கி முறை கேட்டறம் போற்றலாகிற்
     றாளாள நல்லா னிவன்றானிடும் பூச னாளுங்
     கேளா தொழிவா னிதுவென்னரு ளென்று கேட்டாள்.

     (இ-ள்.)  (அவ்வாறு  சொல்லிப்  பின்  அவள் அரசனிடத்தில்)
வாள் - வாள்வித்தையில்,  ஆர் - நிறைந்த, தடம் - பெரிய, தோள் -
புயத்தை   யுடைய,   மன்னர்  மன்னர்தஞ்  செய்கை  -  இராஜாதி
இராஜர்களுடைய  காரியமாவது,  வன் - வலிமைபொருந்திய, போர் -
சத்துரு    ராஜாக்களால்   தாக்கப்பட்ட   யுத்தத்தை,   தோளால் -
புயபலத்தால்,  விலக்கி - நீக்கி,  முறை - தமதுராச்சியத்தில்  குடிகள்
இடும்  முறையீடுகளை,  கேட்டு  -  விசாரித்து,  அறம் - தருமத்தை,
போற்றல்  -  பாதுகாத்தலாம்,  ஆகில் - அரசுநீதி  அப்படி ஆயின்,
தாளாள  -  அத்தொழிலில்    முயற்சியையுடையவரே!,   நல்லான் -
நல்லவனாகிய,   இவன்றானிடும்   பூசல்  -   இம்மனிதனாலிடப்பட்ட
இரைச்சலை,    நாளும்   -   தினந்தோறும்,    கேளாதொழிவான் -
கேட்காமல் விடும்படியான, இது - இத்தன்மை, என் - என்ன காரியம்,
அருளென்று - அதை  எனக்குச் சொல்லியருள்வீரென்று, கேட்டாள் -
கேட்டனள், எ-று.