பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 133


 

 288. ஆதலா லென்க ணின்று முளைத்தவிப் பழியும் போகி
     ஒதநீர் வட்ட மெல்லாந் தடையின்றிப் படர்வ தொன்றாய்த்
     தீதிலாக் குணத்து வேந்தே செப்பவன் வைத்துப் போயிற்
     றியாதுநா னினைந்து டாதே யில்லைசெப் பென்று சொன்னேன்.

     (இ-ள்.)    ஆதலால்    -    ஆகையினால்,  என்கணின்று -
என்னிடமாகவிருந்து, முளைத்த  -  உண்டாகிய, இப்பழியும் - இந்தப்
பழிச்சொல்லும்,  ஒன்றாய்  -  அவற்றைப்போல  ஒன்றாகி,  போகி -
சென்று,  ஒதநீர்வட்டமெல்லாம் - சமுத்திரஞ் சூழ்ந்த இப்பூமிமுழுதும்,
படர்வது - பரவப்பட்டதாயிற்று, தீதிலா -பொல்லாங்கில்லாத, குணத்து
- நற்குணமுடைய,  வேந்தே - அரசனே!, செப்பு - இரத்தினச்செப்பை,
அவன் - அந்தப்  பத்திரமித்திரன், வைத்துப்  போயிற்று  - வைத்துச்
சென்றதை,  யாதும்  - எவ்வளவும்,  நான் - யான்,  நினைந்திடாது -
நினைப்பில்லாமல், செப்பு  -  இரத்தினச்செப்பு,   இல்லை   என்று -
என்னிடம்  வைத்ததில்லை என்று,  சொன்னேன் - சொல்லிவிட்டேன்,
எ-று.                                                  (65)

 289. நினைத்தபின் சத்தியகோட னென்பது நீங்கு மென்றென்
     வினைப்பயன் பெருமை யாலே கொடுத்திலன் வேண்ட வன்றிச்
     சினக்களிற் றுழவ மற்றுவன் றிருவுள்ள மிருக்க வையத்
     தெனக்கொன்று மரிய தில்லை யினிச்செய்வ துரைக்க வென்றான்.

     (இ-ள்.)  நினைத்தபின் -  (அவன் செப்பு வைத்துச் சென்றதை)
நினைத்த  பிற்பாடு, (அதனைக்கொடுத்தால் நாம் சொன்ன சொல்லுக்கு
மாற்றமாகி)   சத்திய   கோடனென்பது   -   சத்தியகோஷனென்கிற
பெயரானது,  நீங்குமென்று -  நீங்கிவிடுமென்று,  என் - என்னுடைய,
வினைப்பயன்   பெருமையாலே  -  கருமோதயத்தின் பெருமையாலே,
வேண்ட  -  பத்திரமித்திரன்  வேண்டிக்கேட்கவும்,  கொடுத்திலன் -
நான்  கொடுக்கவில்லை, அன்றி  -  அல்லாமல்,  சினக்களிற்றுழவ -
கோபம்     பொருந்திய    யானையையுடைய   வீரனே!,    உன் -
உன்னுடைய,  திருவுள்ள  மிருக்க  -  அழகிய  உள்ளத் தயவிருக்க,
வையத்து   -   இவ்வுலகில்,   எனக்கு   -   எனக்கு,    அரியது -
அருமையானது,  ஒன்றும்  -  யாதொன்றும், இல்லை - இல்லை, இனி
-  இனிமேல்,   செய்வது   -   செய்யுங்   காரியத்தை,  உரைக்க -
சொல்லக்கடவாய், என்றான் - என்று கூறினான், எ.று.

     மற்று - அசை.                                     (66)

 290. மன்னவ னதனைக் கேட்டு வரும்பழி விலக்கொ ணாவே
     என்னுனக் கிங்கு வந்த பழியொன்று மில்லை யீண்டம்
     மின்மணிச் செப்பை யீந்தவ் வணிகனை வேண்டிக் கொள்வேன்
     முன்னையென் பித்துத்தீர்த்தான் முனிவனென் றுரைக்க வென்றே.