134மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  மன்னவன்   -   அரசன்,  அதனை  -  மந்திரியால்
சொல்லப்பட்ட   அவ்வசனத்தை,   கேட்டு   -  கேட்டு, வரும்பழி -
உலகத்தில்  வரும்பழியை, விலக்கொணாவே  -  நீக்கமுடியாது தான்,
(ஆயினும்)   உனக்கு   -   நினக்கு,  இங்கு  - இவ்வுலகில், வந்த -
வந்ததாகிய,  பழி  -  பழிச்சொல், என்  -  என்ன,  ஒன்றுமில்லை -
யாதொன்றுமில்லை,  ஈண்டு  -  இவ்விடத்து,  அ  - அந்த,  மின் -
பிரகாசமுடைய,  மணி  -  இரத்தினங்களுள்ள, செப்பை - செப்பினை,
ஈந்து  -  கொடுத்து, அவ்வணிகனை  - அந்த வணிகனை, (எனக்குப்
பித்துபிடித்திருந்ததனாலே    நான்   அவ்வாறு   சொல்லிக்கொண்டு
திரிந்தேன்;   அவ்விதம்)  முன்னை   -   முன்னாலே  பிடித்திருந்த,
என்பித்து    -    எனது    பைத்தியத்தை,   முனிவன்   -    ஒரு
மகாதபசையுடைய   முனிவரன்,  தீர்த்தானென்று  - (அருள்  செய்து)
நீக்கினானென்று,   உரைக்கவென்று  -   உலகில்  சொல்லக்கடவாய்
என்று,  வேண்டிக்கொள்வேன்  -  நான்  வேண்டிக்கொள்ளுகிறேன்,
(அதனால்  உனக்குப்  பழியும்  வராது  உண்மைக்கும் சரியாய்விடும்
என்று அரசன் சொன்னான்), எ-று.                         (67)

 291. மந்திரி நன்றி தென்று வரைபுரை மார்பி னூலுந்
     தன்பெய ரங்கித் திட்ட வாழியுந் தந்து செப்புக்
     குன்கணின் றென்னை விட்டா னொருவரு மறியா வண்ண
     மென்கையிற் செப்பைத் தாவென் றுரைத்துக்கொண் டினிதின்
                                               மீண்டாள்.

     (இ-ள்.)  மந்திரி  -  மந்திரியானவன்,   நன்றிதென்று  -  இது
நன்மையான காரியமென்று,  வரைபுரை - பர்வதம்  போன்ற, மார்பின்
- தனது  மார்பிலணிந்த,  நூலும் - யஜ்ஞோபவீதமும், தன்பெயரங்கித்
திட்ட   -   தனது   நாமத்தைப்   பதித்த,  ஆழியும்  -  முத்திரை
மோதிரத்தையும்,  தந்து  -  அடையாளமாக  உனக்குக்  காட்டும்படி
கொடுத்து,  உன்கண் - உன்னிடத்திரா நின்ற, செப்புக்கு - இரத்தினச்
செப்பை  வாங்கி  வருவதற்கு,  இன்று   -   இப்பொழுது,  என்னை
விட்டான்  -  என்னை  அனுப்பினான், ஒருவரும் - யாவரொருவரும்,
அறியாவண்ணம்  -  தெரிந்துகொள்ளாதபடி,  என் கையில்  - எனது
கரத்தில்,  செப்பை   -   அந்த  இரத்தினச்  செப்பை, தாவென்று -
தரக்கடவாயென்று    (அவற்றைக்  காட்டி),   உரைத்து  -  சொல்லி,
கொண்டு  -  வாங்கிக்கொண்டு, இனிதின் - சந்தோஷமாக, மீண்டாள்
- திரும்பி வந்துவிட்டாள், எ-று.                            (68)

 292. மந்தித்த நோக்கத் தாலிம் மண்ணெலாம் வணக்க வல்லாள்
     சிந்தித்தொன் றுரைத்துச் செய்யிற் றேவரும் பிழைக்க மாட்டார்
     வந்திக்கா ரார்க்கு மூத்தான் வைத்தசெப் பதனை வாங்கித்
     தந்திட்டாள் முகத்தை நோக்கா தாமரைக் கிழத்தி யன்னாள்.