170மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

 368. கருதினாற் கருதிற் றெல்லாங் கருணையா லீயுங் கற்பத்
     தருவின்மே லுருமு வீழச் சாய்ந்தது போல மாய்ந்து
     பருமத யானை வேந்தன் றேவிமேற் பற்றுள் ளத்தாற்
     றிருமக ளனைய ராம தத்தைதன் சிறுவ னானான்.

   (இ-ள்.)   (இது   நிற்க,   அவ்வாறு   புலி  பத்திரமித்திரனைக்
கொன்றபின்) கருதினார் - இச்சித்தவர்கள், கருதிற்று -  இச்சித்தவை,
எல்லாம் - யாவையும்,கருணையால் - தயவால்,ஈயும் - கொடுக்கின்ற,
கற்பத்தருவின்மேல்  -  கற்பகமரத்தின்மேல்,  உருமு -  இடி, வீழ -
வீழ்தலாலே,    சாய்ந்ததுபோல   -    அது    சாய்ந்து   மறைந்து
போவதைப்போல, மாய்ந்து  -  அப்பத்திரமித்திரன்  இறந்து, பரும் -
பருத்த,   மதம்   -   மதம்  பொருந்திய,  யானை  -  யானைக்குத்
தலைவனாகிய,  வேந்தன் - சிம்மஸேனமகாராஜனுடைய, தேவிமேல் -
மனைவியின்மேல்,   பற்றுள்ளத்தால்   -   ( தனது    நியாயத்தைக்
கண்டுபிடித்ததனாலேற்பட்ட )   ஆசையினால்,   திருமகளனைய   -
இலக்குமிக்குச்  சமானமாகிய,  ராமதத்தை  தன் - அந்த இராமதத்தா
தேவியினுடைய,     சிறுவனானான்    -    புத்திரனாகி    அவள்
கருப்பத்திலடைந்தான், எ-று. (12)

 369.கண்ணிடை வெளுப்பெலாம்போய் முகத்திடை பரக்கக் காணா
     நுண்ணிடை தோன்றவிம்மா கண்ணகில் கறுத்து நோக்கிப்
     பண்ணிடைக் கிடந்த தீஞ்சொற் பவழவாய் பாண்டு வாக
    மண்ணிடைத் தோன்ற மைந்தன் மதிபெற்ற திசையை யொத்தான்.

    (இ-ள்.) (அவன் அவ்வாறு இராமதத்தையின் கருப்பத்திலடைந்த
பிறகு)   கண்ணிடை   -    (இராமதத்தைக்கு)   கண்களிடத்துள்ள,
வெளுப்பெல்லாம்  -  வெண்மை  நிறமெல்லாம்,  போய்  - சென்று,
முகத்திடை  -   முகத்தில்,   பரக்க   -   வியாபிக்க,   காணா  -
தெரியாமலிருந்த,  நுண்  -  மெல்லிதாகிய,  இடை  -  இடையானது,
தோன்ற - தெரிய, விம்மா - கதித்து (விம்மி), நகில் - ஸ்தனங்களின்,
கண் - கண்கள், கறுத்து - கறுப்பாகி, நோக்கி - நோக்க, பண்ணிடை
- கீதத்தினிடையே,  கிடந்த -  தங்கியிராநின்ற, (அதாவது  :   கீதம்
போன்ற), தீம் -  இனிமையாகிய, சொல் - வசனத்தைப் பேசக்கூடிய,
பவழவாய்  -   பவழம்போற்   சிவந்த  வாயானது,  பாண்டுவாக  -
வெண்மையாக, மண்ணிடை - இப்பூமியில், மைந்தன் - (மேற்கூறியபடி
கருப்பத்தில் உதித்த) புத்திரன், தோன்ற - பிறக்க,(அரசன்) மதிபெற்ற
-  சந்திரன்  உதயமாகப்பெற்ற,  திசையை   ஒத்தான்  - திக்கானது
பிரகாசிப்பது போல சந்தோஷத்தால் பிரகாசித்தான், எ-று. (13)

 370. வேயெனத் திரண்டமென்றோண் மெல்லிய லோடும்வேந்த
     னாயிரக் கிரணன் சென்ற திசையொடு வானை யொத்துப்
     பாயிரும் பரவை ஞாலம் பைம்பொனா லார்த்தி நாமம்
     சீயசந் திரனென் றோகைத் திசைதொறும் போக்கினானே.