பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 171


Meru Mandirapuranam
 

   (இ-ள்.) (அவ்வாறு   புத்திரன்   பிறக்கச்  சந்தோஷித்தவுடனே)
வேயென - பச்சை மூங்கிலைப்போல, திரண்ட - திரட்சிபெற்ற, மென்
-  மிருதுவாகிய,  தோள்  - தோள்களையுடைய, மெல்லியலோடும் -
மிருதுவான   நடையையுடைய   இராமதத்தையோடும்,  வேந்தன்  -
அரசன், ஆயிரக்கிரணன் - சூரியன்,  சென்ற - நடந்த, திசையொடு -
திக்கோடு கூடிய, வானை - ஆகாயத்தை, ஒத்து - நிகர்த்து, பாயிரும்
-  பெரிதாகிப்பரந்த, பரவை  - சமுத்திரத்தால் சூழப்பட்ட, ஞாலம் -
இப்பூமியிலுள்ள யாசகர்  முதலானவர்களை, பைம்பொனால் - பசுமை
பொருந்திய    பொன்னினாலே,  ஆர்த்தி  -  நிரப்பி,  ( அதாவது :
அவர்களுக்குப்   பொன்னை   மிகுதியாகக்   கொடுத்து),  நாமம் -
அக்குமாரனுக்குப் பெயர்,  சீயசந்திரனென்று  - சிம்மச் சந்திரனென்று
இட்டு, ஓகை - (புத்திரன் பிறந்த) சந்தோஷ செய்தியை, திசைதொறும்
-திக்குகள் தோறும், போக்கினான் - (பத்திரிகைமூலம்) அனுப்பினான்,
எ-று. (14)

 371. நலிவிலாத் தடத்து ணின்ற நளினம்போல் வளர்ந்து நண்ணார்
    குலமெலா மெலிய வாங்குங் கொடுஞ்சிலைப் பயின்று குன்றாக்
    கலையெலாங் கடந்து காமங் கனிந்தன கமல மொட்டின்
    முலைநல்லார்ச் சேர்த்தி னார்கள் முருகுண்ணும் வண்டை
                                           யொத்தான்.

   (இ-ள்.) (அதன்மேல்)  நலிவிலா - நீர்குறைவில்லாத, தடத்துள் -
தடாகத்தில்,  நின்ற  -  உண்டாகி  நிலைபெற்ற,    நளினம்போல் -
தாமரையைப்போல,   வளர்ந்து  -   (அக்குமாரன்)   வளர்ச்சியுற்று,
நண்ணார் -  சத்துருக்களுடைய,  குலமெலாம்  -   கூட்டமெல்லாம்,
மெலிய - தாழும்படியாக, வாங்கும் - வளைக்கப்படுகின்ற, கொடும் -
கொடுமையாகிய, சிலை - வில்வித்தையை, பயின்று - கற்று, குன்றா -
குறையாத, கலையெலாம் - மற்ற  சதுசஷ்டி  கலைகள்  முழுமையும்,
கடந்து -  கற்று  அவற்றின்  கரைகாண,   காமம்  - காமராகத்தில்,
கனிந்தன -  கனிவு  பெற்றனவாகிய,  கமலமொட்டின்  -   தாமரை
அரும்புகள்  போன்ற,  முலை  -  ஸ்தனங்களையுடைய, நல்லார் -
இராஜகன்னிகைகளை,    சேர்த்தினார்கள்    -    (   அவனுக்குத்
தாய்தந்தையர்  விவாகவிதியால் )   சேர்ப்பித்தார்கள் (    அதாவது
மணஞ்செய்வித்தார்கள் ), ( அங்ஙனம்  மணஞ்   செய்வித்த   பின்
அப்பெண்களிடம் அவன்) முருகுண்ணும் - புஷ்பத்தில் மகரந்தத்தை
அனுபவிக்கும், வண்டை யொத்தான் - வண்டை நிகர்த்து இன்பத்தை
அனுபவித்தான், எ-று.

       கடக்க என்னும் எச்சம் கடந்து எனத்திரிந்து வந்தது. (15)

 372. சிலமயில் சூழச் செல்லும் சிங்கபோ தகத்தைப் போலக்
     கலைபயி லல்கு லாருங் குமரனுங் கழுமு நாளுட்
     கொலைபயில் களிநல் யானைக் கொற்றவன் றேவி தன்பான்
     மலைமிசை மதியம் போல மைந்தன்மற் றொருவன் வந்தான்.