182மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

தன்னால்  -  விசோதி  பரிணாமத்தால்,  இடர்க்கடல்  - துக்கமாகிற
சமுத்திரத்தை, கடந்து - தாண்டி, பற்றில் - ஆசையில்,  அழுந்திய -
மூழ்கிய,  வினையை  - கர்மங்களை, வெல்லும் -  ஜயிக்கும்படியான,
அறத்துவித்து  -   தர்மத்தின்   விதையாகிய   நோன்பு   முதலான
பாவனைகளை,   அமைக்க  -  உன்னிடத்தில்  சேர்க்கக்கடவாயாக,
என்றார் - என்றும் சொன்னார்கள், எ-று. (40)

 397. துவர்ப்பசை நான்கிற் றீய விலச்சைமூன் றாகி நாளை
      யவத்தமே போக்கி டாதே யம்மைநும் மாற்றற் கேற்ற
      தவத்தொடு விரதஞ் சீலந் தக்கன தாங்கிச் சிந்தை
      யுவர்ப்பொடு வெறுப்பி னொன்றி யுறுதிக்க ணுழக்க வென்றார்.

   (இ-ள்.)   (மேலும்)    துவர்ப்பசை   நான்கில்  -  (நன்மைக்கு)
விரோதமாகிய           குரோதமான       மாயாலோபமென்னும்
சதுஷ்கஷாயத்தினால்,   தீய   விலச்சை  மூன்றாகி  -  ( கிருஷ்ண
நீலகபோதமென்னும்)     துர்லேசியாபரிணாம  மூன்றாக,  நாளை  -
ஆயுஷ்யநாளை,  அவத்தமே  போக்கிடாது  - வீணாகப்போக்காமல்,
அம்மை  -  இராமதத்தையே!,  நும் - உம்முடைய, ஆற்றற்கேற்ற -
சக்திக்குத்  தகுந்த,  தவத்தொடு  -  தபத்தோடு, விரதம் - பஞ்சாணு
விரதங்களையும்,   தக்கன   -   தகுதியானவைகளாகிய,   சீலம்  -
சீலாசாரங்களையும்,     தாங்கி  -  நீர்தரித்து,  சிந்தை  -  மனதில்,
உவர்ப்பொடு - (இந்தச் சரீர போகாதிகளில் அசுசித்தன்மையிருப்பதை
யுணர்ந்து  அவற்றின்  மீதேற்படும்)  அருவருப்புடனே, வெறுப்பின் -
வைராக்கிய   பாவனையில்,   ஒன்றி  -  பொருந்தி, உறுதிக்கண்  -
ஆத்மனுக்கு  உறுதியாகிய  தர்மத்தில்,   உழக்க  -  உத்ஸாஹித்துச்
செல்லக்கடவாயாக, என்றார் - என்றும் சொன்னார்கள், எ-று.

      சதுஷ்கஷாயங்களையும்,  துர்லேசியாதிரயங்களையும் பதார்த்த
சாரத்தில் விவரமாகத் தெரிந்துகொள்ளலாம். (41)

 398. அருந்தவத் தார்கள் சொல்லைக் கேட்டலு மிராமை சித்தம்
      விரும்பிய தவத்த தாகி வேந்தனா மகனைக் கூவிப்
      பொருந்திய செல்வஞ் சுற்றம் புற்புதம் போல மாயும்
      திருந்திய குணத்தி னாய்நீ திருவறம் மறவ லென்றாள்.

    (இ-ள்.)  (இவ்வாறு   கூறியபின்னர்)  அரும்   -   அரிதாகிய,
தவத்தார்கள்  -  தபஸையுடைய  அவ்விரு மாதர்களது, சொல்லை -
வசனத்தை,    கேட்டலும்    -    கேட்டவுடனே,    இராமை   -
இராமதத்தையானவள், சித்தம் - தன்னுடைய மனமானது, விரும்பிய -
இச்சிக்கப்பட்ட,    தவத்ததாகி   -   தவஞ்   செய்து   நோற்றலில்
பொருந்தியதாக,  வேந்தனாம்  - அரசனாகிய, மகனை - தன்னுடைய
சிம்மசந்திரகுமாரனை,  கூவி  -  அழைத்து, (அவனிடம்) திருத்திய -
திருத்தமாகிய, குணத்தி