யனுசரித்து, எழுந்த - உண்டாகிய, ஓதி - பவப்பிரத்தியய
அவதிஜ்ஞானமானது, கருதிற்றெல்லாம் - தன்னால்
நினைக்கப்பட்டவைகளையெல்லாம், கைத்தலப் படிகம்போல - கையில்
வைக்கப்பட்ட ஸ்படிகம்போல, கண்டது - அறிந்தது, எ-று. (32)
486. தந்தியைத் துடக்க மாய வறிந்துயான் முன்பு செய்த
மந்தமா தவத்திற் பெற்ற துறக்கமந் தாரஞ் சூழ்ந்த
விந்திர விமான மென்னை யெத்திக்குஞ் சூழ வோதி
வந்துநின் றிறைஞ்சு கின்றார் வானவர் தாங்க ளென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு அவதிஜ் ஞானத்தால் தெளிவுண்டான பிறகு
அவன் தன்னை முன்னே தொடர்ந்த), தந்தியை - யானை ஜன்மத்தை,
அறிந்து - தெரிந்து, யான் - நான், முன்பு செய்த - பூர்வத்தில்
பண்ணியதான, மந்தமாந்தவத்தில் அற்பமாகிய தவத்தினால், பெற்ற -
அடைந்த இவைகள், துறக்கம் - தேவருலகமும், மந்தாரம் - மந்தார
விருட்சங்களால், சூழ்ந்த - சூழப்பட்ட, இந்திர விமானம் -
தேவவிமானமுமாகும், என்னை - என்றனை, எத்திக்கும் -
எப்பக்கங்களிலும், சூழ - தங்கள் கூட்டம் நிறைய, வந்துநின்று -
வந்துகூடி நின்று, ஓதி - ஜயஸ்துதி சொல்லி, இறைஞ்சுகின்றார் -
வணங்குகின்றவர்கள், வானவர்கள் - ஸாமான்ய தேவர்களாவர்,
என்றான் - என்று கூறினான், எ-று.
தாம் - அசை. (33)
487. பாடுவார் மதுர கீதந் தேவிமார் மின்னுப் போனின்
றாடுவா ரரம்பை யார்க ளரிவைய ரிலயத் தோடு
மூடுதா னெழுந்த வோசை துந்துபி யோசை யென்று
நீடியா தவதி யாற்பார்த் தறிந்தவ னிருந்த போழ்தில்.
(இ-ள்.) (மேலும்) மதுரம் - மாதுரியமாகிய, கீதம் -
சங்கீதங்களை, பாடுவார் - பாடுகின்றவர்கள், தேவிமார் -
தேவிபரிவாரங்களாவர், மின்னுப்போனின்று - மின்னற் கொடிபோல்
நுடங்கி நின்று, ஆடுவார் - இவ்விடத்தில் நர்த்தனஞ்
செய்கின்றவர்கள், அரம்பையார்கள் - தேவநர்த்தன மாதர்களாவர்,
அரிவையர் - இவ்விதமான ஸ்திரீகளுடைய, இலயத்தோடும் -
மிகவற்புதமாகிய கூத்துக்களின் தாளத்தோடும், ஊடுதானெழுந்த -
இடையிலே கூடி யுண்டாகிய, ஓசை - சப்தமானது, துந்துபி -
தேவவாத்தியங்களது, ஓசையென்று - சப்தமாகுமென்று, நீடியாது -
தாமதமில்லாம், (சீக்கிரமாக உண்டாகிய), அவதியால் - தனது அவதிஜ்
ஞானத்தால், பார்த்து - நோக்கி, அறிந்து - (அங்குள்ள
விசேஷங்களையெல்லாம்) தெரிந்து, அவன் - அந்த ஸ்ரீதர தேவன்,
இருந்தபோழ்தில் - தனது விமானத்திலிருந்த காலத்தில்,
எ-று. (34) |