493. அரணடைந்த வெங்கானத் தானையாய் நின்றுன்
சரணடைந்தே னின்றிந்தச் சாசார னானாற்
கரணமெலாம் வென்றுன்னைக் கண்டவர்கள் காம
மரணமிலா வீடெய்தன் மற்றோர் பொருளோ.
(இ-ள்.)(அவ்வாறு வணங்கிப் பின்னரும் அக்கடவுளை நோக்கி)
அரணடைந்த - அரசன் நாட்டிற்குக் காவலாகச் சேர்ந்த,
வெங்கானத்து - வெப்பம் பொருந்திய (காட்டு மிருகங்களும்
வனசரர்களும் வசிக்கின்ற) சல்லகியென்கிற வனத்தில், ஆனையாய்
நின்று - நான் ஆனையாகப் பிறந்து நிலைபெற்றிருந்து, உன்
சரணடைந்தேன் - (ஜினேஸ்வரனே! உனது குணத்தைச் சிம்மச்சந்திர
முனிவரனாகிய குரு சொல்லக்கேட்டுத் தெரிந்து, உனது பாதத்தை
எனக்கு) ரக்ஷணையாக வடைந்தேன், (அங்ஙனம் அடைந்ததனால்
நான்) இன்று - இப்பொழுது, இந்தச் சாசாரனானால் -
இச்சகஸ்ராரகல்பத்தில் தேவனாகப் பிறந்தால், கரணமெலாம் வென்று -
மனோ வாக்கு காயமாகிய திரிகரணங்களையும் ஜெயித்து
குப்தம்பண்ணி ஆத்மபாவனையில் பரிசுத்தராகிக் கர்மமலங்களை
யகற்றி, உன்னைக் கண்டவர்கள் - உன்னை திரவிய குண
பரியாயங்களால் நிச்சயமாக வறிந்து அதனால் ஸ்வானுபூதி
பெற்றவர்கள், காமம் - காமராகமும், மரணம் - மரணமும், இலா -
இல்லாத, வீடெய்தல் - மோக்ஷமடைதல், ஓர் பொருளோ - ஒரு அரிய
பொருளாகுமோ? (அது அவர்களால் எளிதில் அடையக் கூடியதாகும்),
எ-று.
ஆகுமோ - எதிர்மறை யெச்சம். மற்று - அசை. (40)
494. நிழற்போல நின்றுன்னை வந்தடைந்தார் மாற்றா
மழற்போக்கி யந்தமிலா வின்பத்தை யாக்கி
வழுத்தரா முத்தியின்கண் வைக்குநின்பொற் பாத
நிழற்சேரார் மாற்றா நெடுவழியைச் செல்வார்.
(இ-ள்.) உன்னை வந்து அடைந்து - உன்னிடம் வந்து சேர்ந்து,
நிழல் போல நின்றார் - உன்னுடைய நிழலைப்போல நீங்காது நின்று
நின்தாளை வணங்குகின்றவர்களுடைய, மாற்றாம் - ஸம்சாரமாகிற,
அழல் - ஆதபத்தை, போக்கி - நீக்கி, அந்தமிலா - முடிவில்லாத,
இன்பத்தையாக்கி - ஸௌக்கியத்தை உண்டு பண்ணி, வழுத்தரா -
நீங்குதலில்லாத, முத்தியின்கண் - மோட்சத்தில், வைக்கும் -
சேர்க்கின்ற, நின் - உனது, பொற்பாத நிழல் - அழகிய பாத நிழலை,
சேரார் - அடையாதவர்கள், மாற்றாம் - ஸம்ஸாரமாகிய, நெடுவழியை
- நீண்ட வழியில், சேர்வார் - அடைவார்கள், எ-று. |