517. சீக்குழி யுட்புக நூக்கி னார்சிலர்
வாக்கினார் செம்பினை யுருக்கி வாயிடைத்
தூக்கிமுண் மத்திகை யாற்பு டைத்திரு
பாக்கதாய்ப் பிளந்திடு வாரு மாயினார்.
(இ-ள்.) சிலர் - சில புராதன நாரகர்கள் கூடிக்கொண்டு, (இந்த
நூதன நாரகனை), சீக்குழியுள் - சீழ்க்குழியினுள், புக - விழும்படியாக,
நூக்கினார் - தள்ளினார்கள், செம்பினை - செம்பை, உருக்கி -
ஜலமாகும்படி உருக்கி, வாயிடை - அவன் வாயில், வாக்கினார் -
ஊற்றினார்கள், தூக்கி - உயரத்தூக்கி, முள் மத்திகையால் -
முட்களையுடைய சம்மட்டிகளால், புடைத்து - அவனை அடித்து,
இருபாக்கதாய் - இரண்டு பங்காக, பிளந்திடுவாருமாயினார் -
பிளப்பவருமானார்கள், எ-று. (64)
518. மலையெனப் பெரியதோ ரிருப்பு வட்டினை
யுலையழற் போற்கணத் துருகச் சுட்டிடு
நிலையழற் குட்டத்து வெந்து நீடியா
துலையின்வெம் பலியென வெழுந்து வீழுமே.
(இ-ள்.) (மேலும் அவர்கள் அவனை நெருப்பிலே யிட)
மலையென - பர்வதம்போல, பெரியது - பெரியதாகிய,
ஓரிருப்புவட்டினை - ஒரு இரும்புக்குண்டை, உலையழல் போல் -
கருமானுடைய உலைக்கட அக்கினிபோல, கணத்து - ஒரு
க்ஷணநேரத்தில், உருக - உருகும்படியாக, சுட்டிடும் - சுடும்படியான,
நிலை - ஒரு காலும் பற்றறாமல் நிலைத்திராநின்ற, அழற் குட்டத்து -
அக்கினித் திரளில், வெந்து - வேதலுற்று, நீடியாது - நீட்டிக்காமல்
(அதாவது : உடனுக்குடன் சீக்கிரமாக), உலையின் வெம்பலியென -
உலையிலே கொதிக்கப்பட்ட சோற்றுப்பருக்கை வெப்பத்தின்
அழற்சியால் தானாகவே எழும்புகிறது போல, எழுந்து வீழும் -
(அவன்) எழும்பி விழுவான், எ-று. (65)
519. பஞ்செழ வுலர்ந்துநாப் பரந்த வேட்கையா
னஞ்சினைமடுத்துட னடுங்கி வீழ்ந்திடா
துஞ்சினுந் துஞ்சிடாத் துயர மாக்கட
லெஞ்சலி லாயுக மிரக்க மொன்றிலான்.
(இ-ள்.) (மேலும் அவன்) பஞ்செழ - பஞ்சு பறக்க, உலர்ந்து -
காய்ந்து, நா - நாக்கிலே, பரந்த - மிகுதியாக உண்டாகிய,
வேட்கையால் - தண்ணீர்த் தாகத்தினால் (ஜலம் குடிக்க நினைந்து
அப்போது அங்குள்ளவர்களால் கொடுக்கப்பட்ட), நஞ்சினை மடுத்து -
விஷநீரைக்குடித்து, நடுங்கி - பயந்து, வீழ்ந்திடா - |