258மேருமந்தர புராணம்  


 

வேறு.

558. பகைவனுந் தனக்குத் தானே பாவங்கள் பயின்று சொல்லி
    நகையமை நண்பு தானே நல்வினைக் கேதுவாயிற்
    பகையுற விரண்டும் பாவ புண்ணியப் பயன்க ளாத
    லிகன்மத யானை பாந்த ளிரண்டினுந் தெளிந்த தன்றோ.

     (இ-ள்.)  பகைவனும்    -   சத்துரு   பரிணாமமுடையவனும்,
தனக்குத்தானே - தன்னுடைய ஆத்மனுக்குத் தானாகவே, பாவங்கள் -
பாப வசனங்களை,  சொல்லி   - கூறி, (அதன்படி செய்து) பாவங்கள்
பயின்று   - பாவங்களிலே   தங்க,   நகையமை - இனிமையமைந்த,
நண்பும் - சினேக பரிணாமமும், தானே - தானாகவே, நல்வினைக்கு -
தனக்குப் புண்ணிய வினைகளை யுண்டுபண்ண, ஏது - காரணமாயிற்று,
ஆயின்   - இவற்றை ஆராய்ந்து பார்க்குமிடத்து, (இவ்வாறு) பகை -
சத்துருத்துவமும்,    உறவு   - மித்திரத்துவமும், (ஆகிய) இரண்டு -
இவ்விரண்டும்,    பாவபுண்ணியப்பயன்கள்    -     பாவபுண்ணியப்
பயன்களாய்,    (அதாவது :    சத்துருத்   தன்மை   பாவத்திற்கும்,
மித்திரத்தன்மை   புண்ணியத்திற்கும், பலன்களாக), ஆதல் - ஆவது,
இகல்    - பராக்கிரமம்  பொருந்திய, மதயானை - மதம் பொருந்திய
அசனிகோடமென்னும்   யானை,    பாந்தள்   -   குக்குட ஸர்ப்பம்,
இரண்டினும்  -    (ஆகிய) இந்த இரண்டினாலும் (அதாவது : யானை
புண்ணியமாகிய   மித்திரபாவத்தால்  வானுலகடைந்ததாலும், ஸர்ப்பம்
பாவமாகிய   சத்துரு  பாவத்தால்  நரகமடைந்ததாலும்), தெளிந்தது -
தெளியப் பெற்றதாகும், எ-று.

     பாவங்கள்   -   என்பது  இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது.
அன்றோ - அசை.                                      (105)

559. வாளரி யுழுவை கைம்மா வலையிடைப் பட்டு முய்வ
    நீளர ணாய நல்ல வினையது நின்ற போழ்திற்
    கோளரி யேறு தன்னைக் குறுநரி யேனுங் கொல்லும்
    நீளர ணாய நல்ல வினையது நீங்கி னாங்கே.

     (இ-ள்.) வாள் - ஒளி  பொருந்திய, அரி - ஸிம்மம், உழுவை -
புலி,   கைம்மா   -   யானை,   (ஆகியவை) வலையிடைப்பட்டும் -
வலையிற்சிக்கினாலும்,    நீளரணாய   -   ஆத்மனுக்குப் பெரிதாகிய
ரக்ஷணையாகிய,  நல்லவினையது - நல்ல புண்ணிய கர்மமானது, நின்ற
போழ்தில்    -   உதயத்தைக்  கொடுத்து நின்ற காலத்தில், உய்வ -
பிழைப்பனவாம்,   நீள்   - பெரிதாகிய, அரணாய - ரக்ஷணையாகிய,
நல்ல    வினையது   - நல்ல    புண்ணிய வினையானது, நீங்கின் -
நீங்கினால்,   ஆங்கே    -    அவ்விடத்தே, கோள்   -  கொலை
செய்தலையுடைய,    அரியேறுதன்னை    -    ஆண்சிம்மத்தையும்,
குறுநரியேனும்    -   குள்ளநரியாயிருந்தாலும்,   கொல்லும்  - அது
கொன்றுவிடும், எ-று.                                    (106)