விரகினாற் றூண்டிற் பொன்னை விழுங்கிய மீனைப் போன்றுந்
தெரிவின்றி நுகர்ந்த வெல்லாந் தீரயான் றுறப்ப னென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு வினவிப் பின்னரும்), எரியிடை - ஏற்றிய
விளக்கின் நெருப்பில், பதங்கம்போன்று - (சக்ஷுரிந்திரிய
விஷயத்தினால் வந்து வீழ்கின்ற) வீட்டில் பூச்சிபோன்றும், இளம் -
இளமையாகிய, பிடிக்களிறுபோன்றும் - (சரீரேந்திரிய விஷயத்தில்)
பெட்டை யானைபோலவும், கரி - யானையினுடைய, மதத்து -
மதஜலத்தில், அளியைப் போன்றும் - கிராணேந்திரிய விஷயத்தினால்
வந்து மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்கள் போலவும், கானத்தின் -
கீதத்தில், அசுணம்போன்றும் - (பேஸ்ரீத்திர விஷயத்தினால் மயக்க
மடைகின்ற) கேகயப்புள் போலவும், விரகினால் - தந்திரத்தாலாகிய,
தூண்டில் - தூண்டில் முள்ளில் பற்றிய, பொன்னை - நாகப்பூச்சியை,
விழுங்கிய - ரஸநேந்திரிய விஷயத்தினால் விழுங்குகின்ற,
மீனைப்போன்றும் - மஸ்யத்தைப்போலவும், தெரிவின்றி -
மயக்கத்தினின்றும் தெளிதலின்றி, (அஞ்ஞானத்தினாலே), நுகர்ந்த
வெல்லாம் - அனுபவிக்கப் பெற்றதனாலுண்டாகிய பாபங்களெல்லாம்,
தீர - நீங்கும்படியாக, யான் - நான், துறப்பன் - இந்திரிய விஷய
வாஞ்சையை முழுதும் நீங்கித் தபசைக் கைக்கொள்வேன், என்றான் -
என்று சொன்னான், எ-று. (50)
873. வினைப்பயன் றன்னை வேங்கை முன்விடை போல வஞ்சிச்
சினக்களிற் றுழவன் செம்பொன் முடியினை மகனுக் கீந்திட்
டினத்திடை நீங்கிப் போகு மேறென வேந்து கொங்கை
மினற்கொடிக் குழாத்து நீங்கி மீண்டுபோய் வனம்புக் கானே.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னர்), சினம் - கோபம்
பொருந்திய களிற்றுழவன் - யானைக்குத் தலைவனாகிய ரத்னாயுத
மஹாராஜன், வினை - கருமங்களினது, பயன் தன்னை -
உதயத்தினாலாகிய பலங்களுக்கு, வேங்கைமுன் - புலியினெதிர்ப்பட்ட,
விடைபோல - விருஷபத்தைப்போல, அஞ்சி - பயந்து, செம்பொன் -
சிவந்த பொன்னாலாகிய, முடியினை - கிரீடத்தை, மகனுக்கு - தனது
குமாரனுக்கு, ஈந்திட்டு - பட்டாபிஷேக பூர்வமாகக் கொடுத்து,
இனத்திடை - பசுமாட்டுக் கூட்டத்தினின்றும், நீங்கிப்போகும் - பிரிந்து
போகின்ற, ஏறென - விருஷபத்தைப்போல, ஏந்தும் - மார்பிற்றரித்த,
கொங்கை - ஸ்தனங்களையுடைய, மினல்கொடி - மின்னல்
கொடிபோலப் பிரகாசம் பொருந்திய ராஜ ஸ்திரீமார்களின், குழாத்து -
கூட்டத்தினின்றும், நீங்கி - விலகி, மீண்டு - மறுபடியும், வனம் - முன்
சொன்ன முனிவரனிருக்கின்ற மனோகரவனத்தில், போய் - சென்று,
புக்கான் - அம்முனிவரிடஞ் சேர்ந்தான், எ-று. (61)
874. இடையறா தேற்ற காலத் தீயுமோர் முகிலைப் போலும்
வடிவுடைத் தடக்கை வேந்தன் வச்சிர தந்தன் பாதம் |