(இ-ள்.) (அவ்வாறு செய்து பின்னர்), தரைமகள் -
பூமிதேவியின், திலக மன்ன - நெற்றிப்பொட்டுக் கொப்பாகிய,
(அதாவது : பூமியிற்சிறந்த), தடவரையி தன் கண் - இச் சஞ்சயந்தர்
பரி நிர்வாணமுற்ற இந்த விசாலமான கிரியின்மேல், மேனாள் -
இனிவருங்காலத்தில், பிணையனாருக்கு - பெட்டைமான்போல் மருண்ட
பார்வையையுடைய ஸ்த்ரீமார்களுக்கு, பிரமரி முதல - பிரம்மரி
முதலாகிய, விஞ்சை - வித்தைகள், அடிபட - வசமாக, இரிமந்தான் -
மானபங்கந்தான், இக்குலத்து - இந்த வித்துத்தந்தன்
குலத்துட்டோன்றும், மைந்தர்க்கு - புருஷர்களுக்கு, ஆக என்று -
உண்டாகக்கடவது என்று உறுதிபண்ணி, இதன் பேர் - இப்பர்வதத்தின்
பெயரானது, இரிமந்தமென்று - ஹ்ரீமந்தமென்று சொல்லி, ஓர் -
ஒப்பற்ற, குன்றின் - அப்பர்வதத்தின்மேல், இறைவனாலயம் -
சஞ்சயந்த பட்டாரகருடைய கோயிலை, சமைத்தான் -
உண்டுபண்ணினான், எ-று. (25)
1 இரிமம் - ஹ்ரீமம் என்றும் வடமொழித் திரிபு : இரிமம் -
லஜ்ஜை.
வேறு
995. மஞ்சு லாமலை மேல்மலி மாநகர்
பஞ்ச நன்மணி யோடு பசும்பொனாற்
சஞ்ச யந்தபட் டாரக சட்டகம்
நஞ்சு கட்கிறை வன்செய்து நாட்டினான்.
(இ-ள்.) (அவ்வாறு செய்து), நஞ்சுகட்கிறைவன் -
நரகர்க்கிறைவனாகிய தரணேந்திரன், மஞ்சு - மேகங்கள், உலாம் -
உலாவுகின்ற, மலை மேல் - ஹ்ரீமந்தமென்னும் அப்பர்வதத்தின்
மேலே, மலி (லக்ஷணங்களால்) நிறைந்த, மா - பெருமையையுடைய,
நகர் கோயிலை, பஞ்சம் - ஐந்து விதமான வர்ணங்களையுடைய, நல் -
நன்மையாகிய, மணியோடு - (பத்மராகம், இந்திர நீலம், மரகதம்,
கோமேதகம், வைரம், ஸ்படிகம், முதலாகிய) இரத்தினங்களோடு,
பசும்பொனால் - மாற்றற்ற பசுமையாகிய பொன்னினால், செய்து -
இயற்றி, சஞ்சயந்தபட்டாரக சட்டகம் - சஞ்சயந்தட்டாரகருடைய
பிரதிமாரூபத்தை, செய்து -செய்து, நாட்டினான் - ஸ்தாபித்தான், எ-று.
‘செய்து" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (26)
996. முழவு தண்ணுமை மொந்தை முழங்கின
முழை மழையின் முரன்ற வலம்புரி
கழல நின்றழைத் திட்டன காகளங்
குழலோ டேங்கின வீணைக் குழாங்களே. |