52மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

           அரசன் நகருக்குத் திரும்புதல்.

 108. எழுதரு பருதி முன்ன ரிறைஞ்சிய  கமலம்   போலத்
     தொழுதெதிர் முழுதுங் கேட்டுப் போய்நகர்த் துன்னிச் சுற்ற
     முழுதையு மழைத்து முத்திக் கரசனாய் முயல்வ னென்று
     பழுதிலாப்  புதல்வன்  றன்மேற்  பாரைவைத்  தினைய சொன்னான்.

   (இ-ள்.)   எழுதரு   -    உதயமாகிய,   பருதிமுன்னர்    -
சூரியனுக்கெதிரிலே, இறைஞ்சிய - மலர்ந்து வணங்கிய, கமலம்போல
- தாமரைப்பூப் போல, எதிர் - ஸ்வயம்பு நாமதீர்த்தங்கரருக்கெதிரில்,
தொழுது -   (வைஜயந்த   மகாராஜன்)   வணங்கி,   முழுதும்  -
ஜீவாதிபதார்த்தங்கள்  முழுதும்,  கேட்டு  - அவர் சொல்லக்கேட்டு,
போய்  -  அங்கு  நின்றுபோகி, நகர் - நகரத்தில், துன்னி - (தனது
அரண்மனையைச் )       சேர்ந்து,       சுற்றமுழுதையும்      -
பந்துக்களனைவரையும்,   அழைத்து  -  (சமீபத்தில்)  வரவழைத்து,
முத்திக்கு  -  மோக்ஷத்திற்கு, அரசனாய் - எஜமானாக, முயல்வன் -
(இனிதபத்தில்)  முயற்சி  செய்வேன்,  என்று  -  என்று  தெரிவித்து,
பழுதிலா  - குற்றமில்லாத, புதல்வன்றன்மேல் - ஜேஷ்டபுத்திரனாகிய
சஞ்சயந்தன்மேல்,  பாரை  -  இந்த  பூமி  ராஜ்யத்தை,  வைத்து  -
ஸ்தாபித்து,  இனைய  - இத்தன்மையானவைகளை (பின் பாடல்களில்
வரும் விஷயங்களை),சொன்னான் - அந்தக் குமாரனுக்குக் கூறினான்,
எ-று.                                                 (108)

 109. இளமையு மெழிலும் வானத் திடுவிலி னீண்ட மாயும்
    வளமையுங் கிளையும் வாரிப் புதியதன் வரவு போலும்
    வெளியிடை விளக்கின் வீயு மாயுவு மென்று வீட்டுக்
    குளபக லூக்கஞ் செய்வா ருணர்வினாற் பெரிய நீரார்.

    (இ-ள்.)  உணர்வினால்   -   ஞானத்தினால்,   பெரியநீரார்  -
பெரியதாகிய  குணவந்தர்கள்,  இளமையும்  - பால்யமும், எழிலும் -
அழகும்,  வானத்து  -  ஆகாயத்தில்,  இடு -  இடப்பட்ட, நீண்ட -
நீட்சியாகிய,   வில்லின்   -   இந்திர   தனுஸைப்போல,  மாயும் -
நிலையின்றிக்கெடும்,   வளமையும்   -   வளப்பமாகிய  செல்வமும்,
கிளையும்  -  பந்துத்  தன்மையும்,  வாரிப்புதியதன் வரவு போலும் -
மழையினால்  வரப்பட்ட   புது வெள்ளத்துக்கு ஒப்பாகும், ஆயுவும்-
ஆயுஷ்யமும்,  வெளியிடை  -  (காற்றின் மறைவில்லாத) வெளியிலே
வைக்கப்பட்ட,     விளக்கின்    -   தீபத்தைப்போல்,   மாயும்  -
மாய்ந்துபோகும், என்று - (இவ்வாறு ஸம்ஸார ஸ்வரூபம் அனித்தியம்)
என்று   நினைத்து,   உளபகல்  -  தங்களுக்குண்டாகிய  ஆயுஷ்ய
நாளுக்குள்ளே,    வீட்டு  - மோட்சத்திற்கு,  ஊக்கம்   செய்வார் -
(ஸர்வசங்க பரித்தியாகமாகிற தபசைக்கொண்டு சுத்தோபயோகத்திற்கு)
முயற்சி செய்வார்கள், எ-று.                              (109)